அல்கொய்தா சித்தாந்த ஆதரவு ஆன்லைன் குழுவுடன் தொடர்பு: கோவையில் 19 வயது இளைஞர் கைது
Coimbatore News: சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதாக உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கடந்த 12ஆம் தேதி கைது செய்தனர்.
செப்டம்பர் 17, 2026: அல்கொய்தா சித்தாந்த ஆதரவு கொண்டதாகக் கூறப்படும் ஆன்லைன் குழுவில் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞர் மக்சூத் அலியை, கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதாக உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை கடந்த 12ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடன் போலீஸ் விசாரணை:
முகமது நபீலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி என்பவர் ஆன்லைன் தொடர்புகளுக்காக பிரத்யேக செயலிகளை உருவாக்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், மக்சூத் அலி உத்தரப்பிரதேசத்தில் இருந்து கோவைக்கு வந்து, ஹோப் காலேஜ் பகுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க: பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!
பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மக்சூத் அலி, கோவையில் தங்கியிருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் உத்தரப்பிரதேச ATS போலீசார், கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பெங்களூரு செல்வதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த மக்சூத் அலியை கோவை போலீசார் கைது செய்து உத்தரப்பிரதேச ATS போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை லக்னோவுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் – UAPA-வின் கீழ் வழக்குப்பதிவு:
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டமான UAPA-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தங்கச்சங்கிலியுடன் ஆற்றில் வீசப்பட்ட விநாயகர் சிலை.. 8 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த நபர்..
மேலும், மக்சூத் அலி ‘CAPTAIN M NETWORK’ என்ற பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன் மூலம் நபீல் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரது இரண்டு வாட்ஸ்அப் எண்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த எண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மற்றும் உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மக்சூத் அலிக்கு கோவையில் வேறு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா, அவர் கோவைக்கு வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.