தங்கச்சங்கிலியுடன் ஆற்றில் வீசப்பட்ட விநாயகர் சிலை.. 8 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த நபர்..
, விநாயகர் சிலையை 3-வது நாளான நேற்று ஆற்றில் கரைக்க முடிவு செய்த ராமமூர்த்தி, காலை 9.30 மணியளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உள்ள உப்பனாற்றுக்குச் சென்றுள்ளார். அங்கு பாலத்தில் இருந்து விநாயகர் சிலையை ஆற்றில் வீசியுள்ளார். அப்போது, விநாயகர் சிலைக்கு ஒன்றரை சவரன் தங்க சங்கிலி அணிவித்திருந்தது ராமமூர்த்திக்கு மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிலையுடன் தங்க சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசியுள்ளார்.
செப்டம்பர் 17, 2026: கடலூர் அருகே வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்றபோது, சிலைக்கு அணிவித்திருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை 3, 5 அல்லது 7 நாட்கள் வைத்து தினசரி வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
தங்கச்சங்கிலியுடன் ஆற்றில் வீசப்பட்ட விநாயகர் சிலை:
அந்த வகையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (62), ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளார். மேலும், சிலைக்கு மாலை அணிவித்ததுடன், ஒன்றரை சவரன் தங்க சங்கிலியையும் அணிவித்து வழிபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், விநாயகர் சிலையை 3-வது நாளான நேற்று ஆற்றில் கரைக்க முடிவு செய்த ராமமூர்த்தி, காலை 9.30 மணியளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகே உள்ள உப்பனாற்றுக்குச் சென்றுள்ளார். அங்கு பாலத்தில் இருந்து விநாயகர் சிலையை ஆற்றில் வீசியுள்ளார்.
மேலும் படிக்க: அடுத்த ஆண்டு முதல் சிலைகள் இயற்கை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..
அப்போது, விநாயகர் சிலைக்கு ஒன்றரை சவரன் தங்க சங்கிலி அணிவித்திருந்தது ராமமூர்த்திக்கு மறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிலையுடன் தங்க சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசியுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு தங்க சங்கிலி சிலையுடன் ஆற்றில் சென்றதை உணர்ந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
8 மணி நேரம் நடந்த தேடுதல் பணி:
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் உடனடியாக ஆற்றில் இறங்கி தங்க சங்கிலியைத் தேடத் தொடங்கினார். மேலும், இதுகுறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தங்க சங்கிலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் பணி நடைபெற்றது. எனினும், நீண்ட நேரம் தேடியும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: கோலகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..
இதனால் ராமமூர்த்தி ஏமாற்றமடைந்தார். விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கச் சென்ற இடத்தில், சிலையுடன் ஒன்றரை சவரன் தங்க சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்க சங்கிலி கிடைத்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் சில பொதுமக்களும் ஆற்றில் இறங்கி சிறிது நேரம் தேடியது குறிப்பிடத்தக்கது.