அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த ரெய்டு.. 118 ஆவணங்கள், 18 செல்போன், 3 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்..
அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் வழக்கு தொடர்பாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென் டிரைவ்கள், உள்பொதிக்கப்பட்ட ஹார்டு டிஸ்க் கொண்ட 2 டெஸ்க்டாப்கள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17, 2026: தமிழ்நாடு அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனைகள் நடைபெற்ற நிலையில், தற்போது திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த ரெய்டு:
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு:
இந்த வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் எச்சரிக்கை.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு!
இதையடுத்து, செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சியில் உள்ள இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சியில் உள்ள அன்பில் மகேஷின் இல்லத்தில் காலை சுமார் 7.30 மணியளவில் தொடங்கிய சோதனை 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. சென்னையிலும் திருச்சியிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
118 ஆவணங்கள், 18 செல்போன்கள் பறிமுதல்:
இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் வழக்கு தொடர்பாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 18 செல்போன்கள், 3 லேப்டாப்கள், 8 பென் டிரைவ்கள், உள்பொதிக்கப்பட்ட ஹார்டு டிஸ்க் கொண்ட 2 டெஸ்க்டாப்கள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “8 மணி நேர சோதனை!”… நடந்தது என்ன? வெளியே வந்தவுடன் அன்பில் மகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி என அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு:
சோதனை நிறைவடைந்த நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த சோதனையின் பின்னணியில் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
திமுக 77 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இயக்கம் என்றும், இதுபோன்ற சலசலப்புகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ திமுக தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி உண்மை நிலைநாட்டப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பங்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.