ரூ. 15,000 கோடி முதலீடுகள், 7000 பேருக்கு வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஒரு புதிய மைல்கல்..
CM Vijay London Visit: தமிழ்நாட்டை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்துவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17, 2026: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10ஆம் தேதி லண்டன் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது 6 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தின் மூலம் ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் இலக்கு:
தமிழ்நாட்டை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டை உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக நிலைநிறுத்துவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் செப்டம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமியை முதலமைச்சர் சந்தித்து, இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மற்றும் பிரிட்டன் இடையேயான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
லண்டனில் நடந்த கார் பந்தயத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்:
மேலும், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிட்ட முதலமைச்சர், அங்குள்ள ரேஸ் கன்ட்ரோல், பந்தயத் தடம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டு நிகழ்வுகளில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரூ. 11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு:
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் உற்பத்தி, வடிவமைப்பு பொறியியல், ஒருங்கிணைப்பு மற்றும் தளவாட வசதிகளை அமைத்து சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை OMR அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்.. “11-வது மாடியில் வெடித்த ஃபிரிட்ஜ்!”.. தம்பதி உட்பட 3 பேர் படுகாயம்!!
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தி 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. மேலும், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மூலம் அமைக்கப்பட உள்ள உலகளாவிய திறன் மையம் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய உள்ள ஐரோப்பிய வாகன உதிரிபாக நிறுவனம், தமிழ்நாட்டை முதலீட்டு இடமாகத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
புதிய மைல்கல்லாக அமைந்த பயணம்:
மேலும், ஹிந்துஜா குழும நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக காற்றாலை மின்சக்தி மற்றும் வணிக வாகன ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மேலும் படிக்க: அடுத்த ஆண்டு முதல் சிலைகள் இயற்கை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை சாத்தியமாக்கவும், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை விரைந்து தொடங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். தனது லண்டன் பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.