பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!
Annamalai Praises Periyar on Birth Anniversary: தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். பெரியாரின் சமூகச் சீர்திருத்தப் பங்களிப்புகளைப் போற்றி அவர் பதிவிட்டுள்ள இந்த வாழ்த்து, தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை திராவிட சித்தாந்தத்தை நோக்கி நகர்கிறாரா என்ற புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
செப்டம்பர், 16: தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களாலும் அமைப்புகளாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக திராவிடக் கொள்கை சார்ந்த கட்சிகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது சமூகச் சீர்திருத்தப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தும் வாழ்த்துகளைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவருமான அண்ணாமலை, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் போற்றிச் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளது தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: சென்னை OMR அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்.. “11-வது மாடியில் வெடித்த ஃபிரிட்ஜ்!”.. தம்பதி உட்பட 3 பேர் படுகாயம்!!
பெரியாரின் பங்களிப்பைப் போற்றி புகழாரம்:
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச்… pic.twitter.com/tBhJiNioh2
— K.Annamalai (@annamalai_k) September 17, 2026
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டுத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெரியாரின் புகைப்படத்துடன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள அண்ணாமலை, சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றித் தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்ட பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவுகூர்ந்து வணங்குவதாகவும் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகர்களின் பார்வையும் பின்னணியும்:
பொதுவாக பாஜக மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் பெரியாரை “ஈ.வெ.ரா” என்று அழைப்பதும், அவரது கொள்கைகளைக் கடுமையாக விமர்சிப்பதுமே வழக்கமாக இருந்து வந்துள்ளது.இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, நேரடியாகப் “பெரியார்” என்று குறிப்பிட்டு அவரது புகழைப் போற்றியிருப்பது உற்றுநோக்கத்தக்க மாறுதலாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கித் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படும் சூழலில், திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளைப் போலப் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோரைத் தனது கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு பயணிக்க அண்ணாமலை அச்சாரம் போட்டுள்ளாரா என்ற விவாதம் அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் படிக்க: அடுத்த ஆண்டு முதல் சிலைகள் இயற்கை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..
கடுமையாகும் விவாதங்களும் அரசியல் எதிர்வினைகளும்:
அண்ணாமலையின் இந்த அதிரடிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வழக்கமாக வலதுசாரிச் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் சிலர், பெரியாரைப் புகழ்ந்து அவர் பதிவிட்டதற்குத் தங்களது ஏமாற்றத்தையும் எதிர்ப்பையும் பகிரங்கமாகப் பதிவு செய்து வருகின்றனர். மறுபுறம், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களோ, “தேர்தல் மற்றும் சொந்த அரசியல் கட்சி தொடங்கப்போகும் சூழல் காரணமாகவே அண்ணாமலை இத்தகைய போலி வேடத்தை அணிகிறார்” என விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ, தேசிய அளவிலான சித்தாந்தத்திலிருந்து விடுபட்டு, தமிழகத்தின் பிராந்திய மற்றும் பெரியாரிய அரசியல் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த முயற்சி, வரவிருக்கும் தமிழக அரசியல் கசியில் எந்த மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.