AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு திடீர் தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

5 Constituencies By Election: தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் திடீர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, முதல்வர், பேரவைத் தலைவர், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு திடீர் தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 10 Jul 2026 17:02 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவை தொடர்ந்து, முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களான பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்த நிலையில், மேற்கண்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். ஏ. தர்மதிகாரி, ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 10- ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது, மனுதாரர் வெங்கடாஜலபதி ஆஜராகி தமிழகத்தில் குறிப்பிட்ட 5 தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் அறிவிப்பு வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வாதத்தை முன் வைத்திருந்தார். இதேபோல, எதிர் தரப்பு வாதத்தையும் நீதிபதி கேட்டறிந்தார். அதன்படி, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!

முதல்வர் விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

அத்துடன், இது தொடர்பாக வரும் ஜூலை 31- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக முதல்வர் விஜய், சட்டப்பேரவை செயலர் சாந்தி, மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேற்கண்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் தெரிவித்த கருத்து

அதன் அடிப்படையில், தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்னர் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது என்பது அரசு பணத்தை செலவிடப்படுவதுடன், ஒரு தொகுதிக்கு இரு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் சூழல் உருவாகும். எனவே, இந்த வழக்கு முடியும் வரை இதில் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழல் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!

Follow Us