287 நாட்களுக்குப் பின் கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. அதிரடி பாதுகாப்பு நெறிமுறைகள்!!
கரூர் துயரச் சம்பவம் நடந்த சமயத்தில் முதலமைச்சர் விஜய் கரூருக்கு வர இயலாத சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து நேரில் பேசியிருந்தார். அப்போது, "நிச்சயமாக கரூருக்கு வந்து உங்களைச் சந்திப்பேன்" என அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இன்று அவர் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார்.
கரூர், ஜூலை 10: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜோசப் விஜய் இன்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 287 நாட்கள் கழித்து அவர் கரூர் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது இந்த வருகை அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டம் அதிகமாகிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ராஜினாமா செய்த 3 எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விசாரணை – வெளியான தகவல்
அரசியல் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்பு:
தற்போது 🔔 : கரூர் மக்கள் நமது அண்ணன் @TVKVijayHQ -வுக்கு மலர் தூவி வரவேற்றனர் ! 🥺💥
தனது மக்களுக்கு கைய அசைத்துக் கொண்டு சாலையில் வருகிறார் ! ❣️ pic.twitter.com/2oYpaaRV74
— Prakash Vijay (@PrakazVijay_Of) July 10, 2026
சென்னையிலிருந்து இன்று காலை புறப்படும் முதலமைச்சர் விஜய், கரூரில் உள்ள ‘அட்லஸ் அரங்கம்’ பகுதியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த அரங்கில் சுமார் 5,000 பேர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை முதலமைச்சர் விஜய் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.
கியூஆர் கோடு அனுமதி சீட்டு கட்டாயம்:
கரூரில் உள்ள உள்ளரங்கில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மொத்தம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு ‘கியூஆர் கோடு’ (QR Code) ஸ்கேன் செய்யக்கூடிய வசதியுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கியூஆர் கோடு அனுமதி சீட்டு இல்லாத எவரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு அனுமதி இல்லை?
பாதுகாப்பு மற்றும் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பின்வரும் நபர்களுக்கு இந்த உள்ளரங்க நிகழ்ச்சிக்கு வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது: கர்ப்பிணிப் பெண்கள் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் மேற்கூறிய நபர்கள் எவரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டாம் எனத் தற்காப்பு நடவடிக்கையாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரங்கில் செய்யப்பட்டுள்ள வசதிகள்:
கடந்த காலச் சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகளின்படி இந்த உள்ளரங்கக் கூட்டம் நடத்தப்படுகிறது. 5,000 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் போதுமான காற்றோட்ட வசதி, குடிநீர் (Hydration) மற்றும் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சித் தலைமை சார்பில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்காக ‘ரோட் ஷோ’:
அனுமதி சீட்டு கிடைக்காத கரூர் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதற்காக, கரூர் மாநகரப் பகுதியின் முக்கியச் சாலைகளில் முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட ‘ரோட் ஷோ’ நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாகக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாத ஏனைய தொண்டர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சிரமப்பட வேண்டாம் என்றும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் நேரலை வாயிலாக நிகழ்ச்சியைக் கண்டு ஒத்துழைப்பு நல்குமாறும் அமைச்சர் ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
6,000 போலீசார் பாதுகாப்பு:
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கரூரில் குவியத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க: வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!
அரசியல் முக்கியத்துவம்:
அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனால் இந்தத் தொகுதியில் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.