14ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆறுமுக முருகன் சிலை, நந்தி சிலை.. ஒப்படைக்க முடிவு செய்த ஆஸ்திரேலியா..
இந்த மூன்று தொல்பொருட்களையும் மீட்கும் முயற்சி 2016-ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், கோயில் ஆவணங்கள், பழைய புகைப்படங்கள், அரசுப் பதிவுகள் மற்றும் அருங்காட்சியகத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான தோற்றம் நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர், பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலிய அரசு அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.
ஜூலை 10, 2026: இந்தியாவின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த மூன்று அரிய தொல்பொருட்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தை ஒட்டி, இந்த முக்கிய மீட்பு நடவடிக்கை நிறைவேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய கலை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த சோழர் கால ஆறுமுக முருகன் சிலை, 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்தி சிற்பம் மற்றும் சோழர் கால திரிசூலம் ஆகிய மூன்று தொல்பொருட்களும், பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
சோழர் கால ஆறுமுக முருகன் சிலை, நந்தி சிலை:
தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், இந்தப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டது.
மீட்கப்படும் பொருட்களில் முக்கியமானது, சுமார் 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால ஆறுமுக முருகன் கற்சிலை. கும்பகோணம் அருகே மணம்பாடியில் உள்ள நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இந்தச் சிலை, முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. சுமார் 130 செ.மீ. உயரம் கொண்ட இந்தச் சிற்பம், சோழர் கால சிற்பக்கலையின் நேர்த்தியையும் கலைநயத்தையும் வெளிப்படுத்துகிறது.
சோழர் காலத்து சிலைகளை ஒப்படைக்க முடிவு:
இரண்டாவது தொல்பொருள், திருவாரூர் மாவட்டம் கடுவாங்குடியில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான நந்தி சிற்பமாகும். ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம், 13 முதல் 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.4 கோடி என மதிப்பிடப்பட்டாலும், அதன் வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம் அளவிட முடியாதது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆஸ்திரேலியாவில் வந்தே மாதரம் பாடல் இசைத்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு – வைரலாகும் வீடியோ
மூன்றாவது தொல்பொருள், சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய உலோக திரிசூலமாகும். பத்ரகாளி உருவம் பொறிக்கப்பட்டுள்ள இந்தத் திரிசூலம், தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. கோயில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட இந்தத் திரிசூலம், வழிபாட்டு மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
சிலைகள் மீட்கும் நடவடிக்கை:
இந்த மூன்று தொல்பொருட்களையும் மீட்கும் முயற்சி 2016-ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், கோயில் ஆவணங்கள், பழைய புகைப்படங்கள், அரசுப் பதிவுகள் மற்றும் அருங்காட்சியகத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் உண்மையான தோற்றம் நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர், பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலிய அரசு அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இந்திய தொல்பொருட்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை, இந்தியாவின் கலாசார மரபுச் செல்வங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.