எங்கெல்லாம் மழை பெய்யும்? லிஸ்ட் இதோ… மீனவர்களுக்கும் அவசர எச்சரிக்கை!
Tamil Weather Update: வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதைகளால் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (10-07-2026) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதைகள் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதியில் அதிகபட்சமாக 61 மில்லிமீட்டர் (6 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. மேலும், தஞ்சாவூர், திருவள்ளூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவைக்கு கனமழை எச்சரிக்கை
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை (10-07-2026), நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை உட்பட இதர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இதர மாவட்டங்கள், ஈரோடு, சேலம், வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மிதமான மழையும், புதுவையின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (11-07-2026) முதல் மழையின் அளவு சற்றே குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மட்டும் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையோ அல்லது வறண்ட வானிலையோ நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நிலவரம்
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இன்று அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கும். நாளை (11-07-2026) அதிகபட்ச வெப்பநிலை சற்றே உயர்ந்து 38° செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
மதுரையில் பதிவான உச்சக்கட்ட வெப்பம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் பகல் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4° செல்சியஸ் வரை உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, மதுரை விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக 41.4° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி பொதுமக்களை வாட்டியெடுத்துள்ளது. அதே சமயம், சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கோவை விமான நிலையத்தில் 22.8° செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.6° செல்சியஸும் பதிவாகியுள்ளது. வரும் ஜூலை 12 முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை சற்றே உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Also Read: 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆறுமுக முருகன் சிலை, நந்தி சிலை.. ஒப்படைக்க முடிவு செய்த ஆஸ்திரேலியா..
மீனவர்களுக்கான கடலோரப் பகுதி எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு எந்தவித புயல் எச்சரிக்கையும் இல்லை. இருப்பினும், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகம் வரையிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, அந்தமான் கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய-மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தென் மண்டல தலைவருக்காக விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை எச்சரித்துள்ளார்.