அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ட்ரிங்க்ஸ்.. பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ்.. இனி தினமும் ஹேப்பி தான்!
Government School Chocolate Health Mix : புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் வழங்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
புதுச்சேரி மாநிலமானது காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 3 பிராந்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த மாநிலத்தில் சுமார் 410 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் மாணவர்கள் வரை கல்வி பயின்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மாநில அரசு சார்பில் இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், எழுதுபொருட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படுகின்றன. அத்துடன் ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் ரொட்டி, பால், மதிய உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. இது மட்டும் இன்றி உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ராஜீவ் காந்தி காலேஜ் சிற்றுண்டி திட்டத்தின் கீழ், சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து வழங்கும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்த் மிக்ஸ்
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி அரசுக்கும், ஸ்ரீ சத்திய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 100 மில்லி சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாலுடன் சாக்லேட் மால்ட் ஹெல்த் மிக்ஸ் கலந்து இனி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க: 287 நாட்களுக்குப் பின் கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. அதிரடி பாதுகாப்பு நெறிமுறைகள்!!




தனியார் நிறுவனத்துடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி புதுச்சேரி மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள கல்வித்துறை செயலர் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி அரசின் கல்வித்துறை செயலாளர் கிருஷ்ண மோகன் உப்பு மற்றும் சத்திய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளையின் அறங்காவலர் சந்தோஷ் அல்லத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலமாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதிய உணவு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: குதிரை பேரம் வழக்கு.. பெங்களூருவில் பிடிபட்ட டாக்டர்.. செந்தில் பாலாஜியை நெருங்கும் வளையம்!!