சென்னை குற்றப்பிரிவில் அதிரடி திருப்பம்.. டிஐஜி வருண்குமார் திடீர் பணியிட மாற்றம்!
IPS Officers Transferred : சென்னை மாவட்ட குற்றப்பிரிவு டிஐஜி அருண்குமார் ஐபிஎஸ் ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டி. ஐ. ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல, மேலும் 2 ஐ. பி. எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து அரசு துறைகளில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஐ. பி. எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னை மாவட்ட குற்றப்பிரிவு டி. ஐ. ஜியாக இருந்து வந்த வருண்குமார் ஐ. பி. எஸ். ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை டி. ஐ. ஜி. யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த விக்ரமன் ஐ. பி. எஸ். சென்னை மாவட்ட குற்றப்பிரிவு டி. ஐ. ஜி. யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை போல, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி ஐ. பி. எஸ் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான பணியிட மாறுதல் உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
தலைமை செயலர் முதல் அதிரடி பணியிட மாற்றம்
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் தலைமைச் செயலாளர், முதல்வரின் தனி செயலாளர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், அதிக பணியிட மாற்றம் செய்யப்பட்ட துறையாக காவல் துறையே உள்ளது. இந்த துறையில் உயர் அதிகாரிகள் முதல் காவல் உதவி ஆய்வாளர்கள் வரை அனைவரும் பணியிட மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் பிரமுகரை காரில் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் – கோவையில் பரபரப்பு





ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
காவல் துறையில் தொடர் பணியிட மாற்றம்
இதில், காவல் துறையில் புதிய பிரிவாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடி படைக்கு காவல் துறையில் உள்ள பெண் காவலர்கள் பிரிக்கப்பட்டு இந்த படையில் இணைக்கப்பட்டனர். அதன்படி, சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடி படை செயல்பட்டு வருகிறது. தற்போதும், காவல் துறையில் தொடர் அதிரடி பணியிட மாற்றங்களுக்கு நடுவில் வருண்குமார் ஐபிஎஸ் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 சிறுவர்கள் கைது!