இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிப்பு..
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், கடலூரில் 38.3 டிகிரி செல்சியஸ், நாகையில் 39.2 டிகிரி செல்சியஸ் மற்றும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 9, 2026: தமிழகத்தில் ஒரு பக்கம் மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்து பதிவாகியுள்ளதாக பிராந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், வரக்கூடிய நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:
இதற்கிடையில், சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 9ஆம் தேதியான இன்று கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மகளிர் விடியல் பயண திட்டத்தின் பெயர் மாற்றம்… தமிழக அரசு உத்தரவு!
அதே சமயம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை நாளையும் நீடிக்கும். மேலும், ஜூலை 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:
அதேபோல், ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெப்பநிலை எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதே சமயத்தில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், கடலூரில் 38.3 டிகிரி செல்சியஸ், நாகையில் 39.2 டிகிரி செல்சியஸ் மற்றும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.