பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன விளக்கம்..
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் பல்வேறு வகுப்புகளில் கணிசமான அளவில் புதிய மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆரம்பக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைத்து, கூடுதலாக தேவையான பாடப்புத்தகங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 9, 2026: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், 2026–27 கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகளிலோ அல்லது பள்ளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கும் பணிகளிலோ எந்தவித தாமதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடா?
பள்ளிகள் முன்கூட்டியே அளித்திருந்த மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு, புதிய கல்வியாண்டு தொடங்கும் முன்பே சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் பல்வேறு வகுப்புகளில் கணிசமான அளவில் புதிய மாணவர் சேர்க்கைகள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆரம்பக் கல்வி இயக்குநரகம், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைத்து, கூடுதலாக தேவையான பாடப்புத்தகங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தேவை – அச்சிடும் பணிகள் தீவிரம்:
அதன்படி, சுமார் 80 ஆயிரம் கூடுதல் பாடப்புத்தகங்கள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்ட நிலையில், அவற்றை அச்சிட்டு உடனடியாக பள்ளிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக அச்சிடப்பட்ட அனைத்து பாடப்புத்தகங்களும் தயாராகி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிப்பு..
மேலும், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் சேர்த்து தேவையான பயிற்சிப் புத்தகங்களும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிய மாணவர்கள் முழுமையான கற்றல் உபகரணங்களைப் பெறுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செயல்பாடுகளில் எந்த குறைபாடும் இல்லை:
எனவே, சில பள்ளிகளில் தற்காலிகமாக பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படும் நிலை, கல்வியாண்டு தொடங்கிய பின்னர் ஏற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கைகளால் உருவான தற்காலிக சூழலே தவிர, பாடப்புத்தகங்களை அச்சிடுதல் அல்லது திட்டமிடுதல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாடும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவான தேவையை உடனடியாக மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கூடுதல் பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் முழுமையாக கிடைப்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.