முதல்வர் விஜய்யின் ஆடை விளம்பரமே செய்தியாக வருகிறது… மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
M K Stalin criticizes CM Vijay: தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கோட் சூட் போட்டு வந்தார். பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்தார் என்பதெல்லாம் செய்திகளாக வருகின்றன என்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் திமுகவின் எம். பி. ஆன கலாநிதி வீரா சாமியின் மகன் திருமணம் இன்று புதன்கிழமை ( ஜூன் 17) நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒரு மாநிலத்தின் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகிறது. ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததால் பல்வேறு கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. கொள்கை மற்றும் இலட்சியத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக தான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.
முதல்வர் ஆடை தொடர்பாக செய்திகள் வருகின்றன
தற்போதைய காலத்தில் சமூக வலைதளம் எந்த அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சமூக வலைதளம் என்பது ஒரு அளவு தான். நாட்கள் செல்ல செல்ல அவையெல்லாம் மறைந்து போக தான் செய்யும். தற்போது, சமூக வலைதளங்களை பார்க்கும் போது, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கோட் சூட் போட்டு வந்தார்… கையில் டிபன் கேரியர் எடுத்து வந்தார்… வாட்ச் கட்டி வந்தார்… செஸ் விளையாடினார்… இன்றைக்கு கோட் சூட் போடவில்லை… பட்டு சட்டை, பட்டு வேஷ்டியில் வந்தார் என்பதெல்லாம் செய்திகளாக வருகின்றன.
மேலும் படிக்க: ஊருக்கு போற ப்ளான் இருக்கா? வார விடுமுறைக்காக 975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..




முதல்வரை பார்த்து நான் கேட்பது ஒன்று தான்
இவையெல்லாம் மறைந்து நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அனைத்தும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் அவரை பார்த்து நான் கேட்பதெல்லாம் தயவு செய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள். அதனை படித்து, அதில் இருக்கும் உண்மையை கண்டு பிடியுங்கள். அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன் என்று தெரிவித்தார். தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற போது, கருப்பு வெள்ளை நிற கோட் சூட் அணிந்திருந்தார்.
தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு ஆடையில் வந்த முதல்வர்
தற்போது வரை அவர் இந்த ஆடையிலேயே தினமும் தலைமைச் செயலகத்துக்கு வந்து செல்கிறார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெருங்கிய நபரின் புதுமனை புகுவிழா வீட்டுக்கு சென்றிருந்த முதல்வர் அங்கிருந்தவாறு தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டை உடுத்திருந்தார். மேலும், வீட்டிலிருந்தே டிபன் கேரியலில் உணவு எடுத்து வந்து சாப்பிட்டார். இவை செய்திகளாக வெளிவந்த நிலையில் மு. க. ஸ்டாலின் அதை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!