காதலிக்கலனா அவ்வளவுதான்.. நெல்லையில் 16 வயது சிறுமிக்கு மிரட்டல்.. போக்சோவில் இளைஞர் கைது!
Tirunelveli Youth Arrested : திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை அளித்து வந்ததுடன், அவரின் செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்த இளைஞர் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அசோக் ( 27 வயது). இவர், பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணிக்கு சென்று வந்த போது, அவரிடம் அந்த இளைஞர் அசோக் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரது காதலை அந்த சிறுமி ஏற்க மறுத்ததாக தெரிகிறது. அத்துடன் அசோக் உடன் பேசுவதை அந்த சிறுமி தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சிறுமியை தொடர்ந்து காதல் தொல்லை அளித்து வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனை அந்த சிறுமி கண்டித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த இளைஞர் அசோக் அந்த சிறுமிக்கு மேலும் மேலும் தொந்தரவு அளித்துள்ளார்.
சிறுமியின் செல்போனை உடைத்து காதல் தொல்லை
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமி தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இளைஞர் அசோக், அந்த சிறுமியிடம் காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அப்போதும், அந்த சிறுமி இளைஞரை கண்டித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். இதில், ஆத்திரம் அடைந்த அசோக் திடீரென அந்த சிறுமி வைத்திருந்த செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்து விட்டு ரகளை செய்தார். இதனால், அந்த சிறுமி அச்சத்தில் சத்தமிட்டார்.
மேலும் படிக்க: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… முழு விவரம்!




போக்சோ வழக்கின் கீழ் இளைஞர் கைது
உடனே, அங்கிருந்தவர்கள் சிறுமிக்கு ஆதரவாக திரண்டு வந்த நிலையில், அந்த இளைஞர் அங்கிருந்த தப்பி சென்று விட்டார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பெயிண்டர் தொழிலாளர் அசோக்கை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
இதில், அந்த நபர் 16 வயது சிறுமிக்கு காதல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக மிரட்டல்.. தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம்… இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!