ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக மிரட்டல்.. தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம்… இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!
Chennai Inspector Bukhari Arrested : பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் புகாரியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டம், பரங்கிமலையில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் புகாரி என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவரை என்கவுண்டர் செய்திருந்தார். தற்போது, இவர் மீது சௌகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் அகிலகுமார் என்பவர் தன்னை மிரட்டி ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக புகார் ஒன்று அளித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காவல் ஆய்வாளர் புகாரி மீது போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டனர். இதில், ஆய்வாளர் புகாரி நேற்று திங்கள் கிழமை பரங்கிமலை காவல் நிலையத்தில் இருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் கைது
இதை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் புகாரியிடம் காவல் உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டிருந்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் தொழிலதிபரிடம் ரூ.40 லட்சத்தை காவல் ஆய்வாளர் புகாரி லஞ்சமாக பெற்றது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் புகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் புகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மிரட்டி பணம் பறிப்பு
இதனிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மொட்டை கிருஷ்ணகுமார் என்பவர் பயன்படுத்திய கைபேசி எண் அகிலகுமாரின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறி, மவுண்ட் ரோடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அகிலகுமார் தமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தும், வழக்கில் 29- ஆவது குற்றவாளியாகச் சேர்த்து விடுவதாக மிரட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 40 லட்சம் லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
அதன் அடிப்படையில் இந்த கைது நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம காவல் துறை வட்டாரத்தி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான இன்ஸ்பெக்டர் புகாரி என்பவர் கடந்த 2008- ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.