மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு… முக்கிய நபர் அதிரடி கைது!
Meenakshi Amman Temple Land Irregularity : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 60 கோடி நிலம் முறைகேடு செய்யப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்டதாக பெங்களூரில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கெனவே, ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மதுரை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலம் அந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சார்பதிவாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கோயில் நில முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட பெங்களூரில் வசித்து வந்த இளையராஜாவை குற்றப்பிரிவு போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை ( ஆகஸ்ட் 4-ஆம் தேதி) அதிரடியாக கைது செய்தனர்.
இரு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு
மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தின் உயிலின்படி, இந்த நிலத்தை விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ, கைமாற்றவோ யாருக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற இடைக்கால தடையும், வருவாய்த் துறையின் நிலுவை வழக்குகளும் இந்த நிலத்தின் மீதான இருந்தபோது, அதனை மறைத்து கடந்த 2021- ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் பொது அதிகார பத்திரம் மற்றும் அடமான பத்திரங்கள் மூலமாக சட்டவிரோதமாக கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல் கொடுமை? வேடசந்தூர் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு.. திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு!




வழக்குப்பதிவு செய்யப்பட்ட 19 பேர் விவரம்
மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு விவகாரம் பூதாகரமான நிலையில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் முன்னாள் வட்டாட்சியர் தொடர்பு குறிப்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி அரசன், முன்னாள் வட்டாட்சியர் அன்பழகன், ராமாயி ஆயியார், செந்தமிழ்ச்செல்வி, பிரேமா, ராஜ்குமார், முத்துராணி, ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், ஜோதி, கீதா, இளையராஜா, அனீஸ், அனந்தராமன், கவிதா, பிரகாஷ், காளி, குமார், பிரசாந்த், சந்தான கருப்பன் ஆகிய 19 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜாதி பாகுபாட்டால் மனவேதனை.. கோவையில் தீயணைப்பு வீரர் சீருடையில் தூக்கிட்டு தற்கொலை.. மனைவி கண்ணீர் புகார்!