கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய மாணவி.. குரூப் 1 தேர்வில் சாதனை.. விரைவில் துணை ஆட்சியராக பதவியேற்கிறார்!
Deputy Collector Jennifer: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி ஜெனிபர் கடுமையான குடும்ப சூழ்நிலையிலும் டிஎஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக தேர்வாகி உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் கடந்த 2004- ஆம் ஆண்டு ஜூலை 16- ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19 குழந்தைகள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை ஆண்டுதோறும் ஜூலை 16-ஆம் தேதி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஜெனிபர் என்ற மாணவி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 15- ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர், விரைவில், துணை கலெக்டராக பதவி ஏற்க உள்ளார். கும்பகோணம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜெனிபர் 4- ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஜெனிபர் மனதில் விதையாக விழுந்த ஆட்சியர் கனவு
தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த போது அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராதா கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் உடனடி உதவிகள் ஆகியவற்றை செய்திருந்தார். இந்த நிகழ்வு ஜெனிபரின் மனதில் ஆழமாக பதிந்தது. மேலும், இந்த நிகழ்வால் தானும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க: சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவுறுத்தல்!!




குடும்ப சூழ்நிலையிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஜெனிபர் 12- ஆம் வகுப்பு வரை படித்தார். அப்போது, குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பயிற்சி மையத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்தபடியே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்தும், தனது தாய் சுஜாதாவின் உதவியுடனும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்கு பலனாக குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று விரைவில் துணை ஆட்சியராக பதவி ஏற்க உள்ளார்.
தீ விபத்தில் இருந்து ஜெனிபர் தப்பித்தது எப்படி
பள்ளியில் தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஜெனிபர் பள்ளியின் மேல் தளத்தில் இருந்து தரை தளத்திற்கு இறங்கி வந்தார். இதன் காரணமாக ஜெனிபர் தீ விபத்தில் இருந்து தனது சகோதரருடன் உயிர் தப்பினார். இருந்தாலும், அவருடன் பயின்று வந்த பல மாணவ, மாணவிகள் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜெனிபர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!