ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு.. ரூ.5 கோடி கிரிஸ்டல் மெத் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு.. சுங்கத்துறை அதிரடி!
Chennai 5 Crore Methamphetamine Seized : சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை விட்டு சென்ற நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர் .
சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்டு வரும் விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், எப்போதும் சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், விமான நிலைய வளாகத்தில் ஒரு பார்சல் கேட்பாரற்றுக் கிடந்தது. இதைப் பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்து அதனை சோதனை செய்தனர். அதில், அதிக அளவு கிறிஸ்டல் மெத் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், விமான நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், அந்த போதைப்பொருள் சரக்கு விமான மூலம் மலேசியா நாட்டுக்கு கடத்தப்பட இருந்ததாக தெரியவந்தது. மேலும், விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டன.
ரூ.5 கோடி மதிப்பிலான மெத் போதை பொருள்
இதனால், போதைப் பொருள் கடத்தல் கும்பல் அச்சமடைந்து அந்த பார்சலை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தற்போது, சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.5 கோடி என மதிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்களை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க 6 முக்கிய வழிகள்.. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்!




போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்
இதற்காக கண்காணிப்பு கேமரா காட்சிகள், விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை திரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை
இதனை தடுக்கும் வகையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு போதை பொருட்களை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் மற்றும் உபயோகத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பரபரப்பாக இயங்கி வரும் சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: திடீரென குறுக்கே வந்த பைக்.. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம்.. அடுத்து நேர்ந்த சம்பவம்..!