பயிர் கடன் தள்ளுபடி விவகாரம்.. தவெக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுகிறது.. எடப்பாடி குற்றச்சாட்டு!
Edappadi K Palaniswami : தமிழக விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். மேலும், பல்வேறு விமர்சனம் வைத்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி அனுபவம் இல்லாத காரணத்தால் தமிழக அரசு பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் எந்த விதமான முன்னெச்சரிக்கையும் இன்றி ஆட்சிக்கு வந்தால் குறு, சிறு விவசாயிகளின் பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன் தொகை முழுமையாகவும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து அதிமுக சார்பிலும், விவசாய சங்கங்கள் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிர்கடன் தள்ளுபடியில் புதிய அறிவிப்பு
இதில், ரூ.75 ஆயிரம் வரை பயிர் கடன் பெற்றிருந்தால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் பெற்றிருந்தால் ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக குறு, சிறு விவசாயிகள் ஒரே சமூக பொருளாதார நிலையில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அவர்களிடையே பெரிய அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு கிடையாது. இந்த வேறுபாட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகளுக்கு வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் கடன் தள்ளுபடிகள் பாரபட்சம் காட்டுவது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல.
மேலும் படிக்க: மின்தடைக்கு தீர்வு.. ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு..




பயிர்கடன் தள்ளுபடி பாகுபாடு வரலாற்றில் இல்லாததாகும்
ஒரே நிலையில் உள்ள குறு, சிறு விவசாயிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கும் மட்டும் முழு தள்ளுபடி. மற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி என்று அறிவிப்பு வரலாற்றில் இல்லாத ஒன்றாகும். பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றது போல கடன் அளவும் வேறுபடும் என்பதை தமிழக வெற்றிக் கழக அரசு உணரவில்லை. மனம் போன போக்கில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று துக்ளக் பாணி ஆட்சி நடத்துவதை இந்த அரசு கைவிட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியின்படி தள்ளுபடி அறிவிக்க வேண்டும்
எனவே, தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?