பெற்றோர்களே கவனிங்க.. ஸ்காலர்ஷிப் லிங்க் வந்தால் க்ளிக் செய்யாதீங்க.. பரவும் நூதன மோசடி!
Tamil Nadu Education Scholarships Scam: தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதில், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்து கடந்த ஜூன் 4- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரை சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு உங்களது குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த உதவி தொகையை பெறுவதற்கு முன் பணமாக ரூ.18 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகை பின்னர் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கின்றனர். அதன்படி, பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே உதவி தேவை பெற்றதாக சில பெற்றோர்களுக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்டை போலியாக அனுப்பி வைத்துள்ளனர். இதை உண்மை என நம்பிய பெற்றோரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு க்யூ ஆர் கோடு ஸ்கேன் குறியீட்டை அனுப்பி வைத்து அதன் மூலம் பணம் செலுத்துமாறு கூறுகின்றனர். அதன்படி, இந்த எண்ணுக்கு சில பெற்றோர்கள் பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.
வங்கி கணக்கில் உள்ள மொத்த பணம் மாயம்
பணம் செலுத்திய ஓரிரு நாட்கள் கழித்து அவர்களது வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் மர்ம நபர்கள் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றி விடுகின்றனர். இந்த சம்பவமானது சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக எந்த பெற்றோரையும் அதிகாரிகள் தொடர்பு கொள்வது கிடையாது.
மேலும் படிக்க: காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் – சோதனை முறையில் அறிமுகம்
நலத்துறை மூலமாக வங்கி கணக்கில் உதவித் தொகை
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை என அந்தந்த நலத்துறைகள் சார்பில் மாணவ மாணவிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக உதவி தொகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதை தவிர்த்து பெற்றோர்களின் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளின் வழியாக உதவித்தொகை வழங்குவது கிடையாது. எனவே, உதவித்தொகை தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மாணவர்களின் பெற்றோர்கள் நம்ப வேண்டாம்.
எந்த தகவலையும் பெற்றோர் பகிரக்கூடாது
கடந்த காலங்களில் இது போன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மோசடி நபர்களிடம் ஏமாறாமல் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற மர்ம நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு எந்த விதமான தகவல்களையும் பகிரக்கூடாது. மேலும், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!



