BREAKING: திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கு உயர்வு.. வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளை அறிக்கை வெளியீடு!
TN Govt Finance Status White Paper: தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். இதில், கடந்த திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கு உயர்ந்துள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசாக தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்ற நிலையில், தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் இருந்த தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 16) வெளியிட்டார். இதில், பல்வேறு காரணிகளை அவர் தெரிவித்துள்ளார். இதில், கடந்த 5 ஆண்டில் ரூ. 4.87 லட்சம் கோடி புதிதாக கடன் பெறப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின் 60 ஆண்டுகளில் பெறப்பட்ட கடனை விட கடந்த 5 ஆண்டுகளில் அதிக கடன் வாங்கியுள்ளனர். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் சதவீதம் 5.45 சதவீதமாக சரிவடைந்துள்ளது. 2021 – 2022- இல் 5. 93 சதவீதமாக இருந்தது. மாநில மொத்த உற்பத்தியில் 28% கடன் உயர்ந்துள்ளது. இது நாட்டிலேயே தமிழகத்தில் அதிகம் ஆகும்.
தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934
மொத்த வருவாய் வரவுகளில் வட்டி செலவினத்தின் சதவீதம் 22.8% ஆகும். தனிநபர் மீதான கடன் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 934 ஆகும். 2020- 2021- ஆம் ஆண்டில் ரூ. 67 ஆயிரத்து 087- ஆக இருந்த தனிநபர் மீதான கடன் 2025- 2026- ஆம் ஆண்டில் மேற்கண்டவாறு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை மற்ற மாநிலங்களை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது. 3 ரூபாயில் ஒரு ரூபாய் வட்டிக்கே செல்கிறது. சொந்த வரி வருவாயில் சுமார் மூன்றில் ஒரு ரூபாய் கடனுக்கான வட்டியை செலுத்தவே செலவாகிறது. ஆண்டுக்கு வட்டி செலவு ரூ. 67 ஆயிரத்து 50 கோடி ஆகும். தமிழகத்தின் மொத்த நிலுவை கடன் ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது.
மேலும் படிக்க: குதிரை பேரம்.. ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..




திமுக ஆட்சியில் 2 மடங்கு கடன் உயர்வு
கடந்த திமுக ஆட்சியில் கடன் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது. பஞ்சாப், கேரளம் வரிசையில் தற்போது தமிழகம் இணைந்துள்ளது. தற்போதுவரை, குஜராத் மாநிலம் 0.8%, மகாராஷ்டிரா 0.7 சதவீதம், கர்நாடகம் 0.8% வருவாய் உபரியாக கொண்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மூலம் கிடைக்கும் நிதி பகிர்வின் வளர்ச்சி மந்தமானதும் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமாகும்.
மூலதன செலவை விட கடன் அளவு இரட்டிப்பு
வருவாய் வரவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் புதிய திட்டங்களுக்கு கூடுதல் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூலதன செலவை விட கடன் அளவு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்துள்ளது. மின்வாரியத்தில் ரூ. 2.47 லட்சம் கோடி கடன் உள்ளது என்பன உள்ளிட்ட காரணிகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மின்தடைக்கு தீர்வு.. ரூ. 15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உத்தரவு..