மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு – தவெக அரசின் பித்தலாட்டம் – திமுக கடும் விமர்சனம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்றில் முதன்முறை என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் திமுக அதனை விமர்சித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், இது மக்களை திசைதிருப்பும் வேலை என விமர்சித்துள்ளது.
சென்னை, ஜூன் 7 : முதல்வர் விஜய்யின் உத்தரவின் படி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது வரலாற்றில் முதன்முறை என்றும் இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் இதுவரை நடைபெறவில்லை என்றும் பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் இருந்தனர். மேலும் இந்த பதவி உயர்வுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மின்சாரவாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு என்பது தவெக அரசின் பித்தலாட்டம் என விமர்சித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.




தவெக அரசுக்கு திமுக சார்பில் கண்டனம்
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாள் ஒரு பொய். பொழுதொரு புளுகு. சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு வரலாற்றில் முதன்முறை என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை.
இதையும் படிக்க : இனி கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி – வெளியான அறிவிப்பு
உண்மையின் பின்னணி 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் ‘Seniority’ விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் படி மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது. தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
திமுக வெளியிட்ட அறிக்கை
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு… pic.twitter.com/ync5hvCtes
— DMK (@arivalayam) June 7, 2026
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது? மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
இதையும் படிக்க : 3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்? தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். 300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு.
குறிப்பாக மார்ச் 2026 ஆம் ஆண்டு திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை என திமுக சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.