“ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்ல ஆட்சி தருவாரா?” முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக '200 யூனிட் இலவச மின்சாரம்' என்றார்கள். ஆனால், மின்சாரத் துறையில் ₹2.5 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தே ஏன் இந்த வாக்குறுதியைத் தந்தார்கள்? மக்களுக்கு முதலில் தடையில்லா மின்சாரத்தைக் கொடுங்கள், அப்புறம் இலவசத்தைப் பற்றி யோசிக்கலாம்.
சென்னை, ஜுன் 07: தவெக அரசு குறித்தும் முதலமைச்சரின் தகுதிகள் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக காரசாரமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய ‘அரசியல் பேரிடர்’ நடந்து முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டதோடு, மக்கள் இதனை அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்றார். மேலும், தனது தம்பிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கிய அவர், “உடல் தகுதியையும், மன தகுதியையும் வளர்த்துக் கொண்டு தயாராக இருங்கள். நமக்கான களம் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் எதையும் தயார் செய்ய வேண்டியதில்லை, ஆளுங்கட்சியினரே நமக்கான களத்தைத் தயார் செய்து தருவார்கள்” என்று நம்பிக்கையூட்டினார்.
இதையும் படிக்க: “தவெக-வுக்கு கொள்கை, கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும் கிடையாது!”.. சரமாரியாக விளாசிய முத்தரசன்!
“நல்ல படம் இல்லை… நல்ல ஆட்சியா?”
புதிய முதலமைச்சரின் சினிமா பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய சீமான், அவர் எதன் அடிப்படையில் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்வியை எழுப்பினார். “நெல்சன் மண்டேலா போல 27 ஆண்டுகள் சிறையில் இருந்து, தியாகங்கள் செய்து, எண்ணற்ற போராட்ட வழக்குகளைச் சந்தித்து இவர் ஆட்சிக்கு வரவில்லை. சல்மான் கான் போல வாங்கும் சம்பளத்தில் பாதியை மக்களுக்குக் கொடுத்து இதயத்தை வென்றும் வரவில்லை. சினிமாவில் நடித்த கவர்ச்சியால் வந்துவிட்டு, இப்போது தகுதி பற்றிப் பேசினால் கோபப்படுகிறார்” என்று சாடினார்.
மேலும், “அவர் நடித்த 69 படங்களில் ஒரு படம் கூட உருப்படியான, நல்ல படம் கிடையாது. எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றோரின் படங்களில் சமூகக் கருத்துகளோ அல்லது நல்ல பாடல்களோ இருந்தன. ஒரு நல்ல படம் கூட தராதவர் நல்ல ஆட்சி தருவார் என்று எப்படி நம்புகிறார்கள்?” என ஆச்சரியம் தெரிவித்தார்.
அமைச்சர்களின் செயல்பாடுகள் மீதான விமர்சனம்:
புதிய அமைச்சர்களின் நிர்வாகத் திறமையின்மை குறித்துப் பல்வேறு உதாரணங்களைச் சீமான் அடுக்கினார். போக்குவரத்துத் துறை அமைச்சர், ரசிகர் மன்றத் தலைவரைப் போல அரசுப் பேருந்தை முன்பதிவு செய்தவர்களை விடுத்து, காத்திருந்தவர்களை ஏற்றிவிட்டதாகக் கூறுவது என்ன மாதிரியான நிர்வாகம்?. “டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை ஒரே நாளில் நிறுத்த முடியாது, சினிமா போல உடனடியாக எதையும் மாற்ற முடியாது” என்று ஒரு அமைச்சர் தர்ம நியாயம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. மீனவர் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு குறித்துக் கேட்டால், “நோ கமெண்ட்ஸ்” என்று மூன்று முறை கூறி நழுவுகிறார். இதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ என்றார்கள். ஆனால், மின்சாரத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தே ஏன் இந்த வாக்குறுதியைத் தந்தார்கள்? மக்களுக்கு முதலில் தடையில்லா மின்சாரத்தைக் கொடுங்கள், அப்புறம் இலவசத்தைப் பற்றி யோசிக்கலாம்.
இரண்டு தொகுதிகளில் போட்டி – மக்கள் விரோத செயல்:
புதிய முதலமைச்சர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதை “மக்கள் விரோத செயல்” என்று சீமான் சாடினார். “ஒருவர் இரண்டு தொகுதிகளில் நின்று, வென்ற பிறகு ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் போது, அங்கு வழுக்கட்டாயமாக ஒரு இடைத்தேர்தல் திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த அரசு அதிகாரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை என மக்களின் உழைப்பும், குறைந்தது ₹20 கோடி மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இதுதான் நீங்கள் பேசும் தூய சக்தியா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!
முந்தைய திமுக அரசு மீதான சாடல்:
தற்போதைய அரசியல் சூழல்களுக்குப் பழைய திமுக அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டிய சீமான், “நான் ஈரோட்டில் 5 நிமிடம் கூடுதலாகப் பேசினேன் என்பதற்காக என் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்திற்கு இரண்டு நாட்கள் அலையவிட்டார்கள். ஆனால், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விவகாரங்களில் 41 பேர் மரணமடைந்ததற்கு, ஒரு எஃப்.ஐ.ஆர் (FIR) கூட பதிவு செய்யாத கோழை அரசு முந்தைய திமுக அரசு” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.