தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மு. வீரபாண்டியன் அறிவிப்பு
TVK Alliance Meeting : தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் தவெகவின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காது என ஏற்கெனவே அறிவித்திருந்தது.
சென்னை, செப்டம்பர் 8 : தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். தவெக ஆதரவு கட்சிகளின் 2வது கூட்டம் சென்னையில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது என அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடத்தில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தபோது, 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. மேலும், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை ஆதரவு தர, தவெக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
இதையும் படிக்க : பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் தவெகவின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காது என ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 8, 2026 இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கப் போவதில்லை என மு. வீரபாண்டியன் இன்று தெரிவித்தார். மேலும், மதச்சார்பின்மை நீடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வெளியில் இருந்து தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும் என்று அவர் குறிப்பிட்டார் .தவெக ஆதரவு கட்சிகளின் முதலாவது கூட்டத்திலும் இவ்விரு கட்சிகள் பங்கேற்கவில்லை.
மேலும் பேசிய அவர் சட்டமன்ற மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதல்வர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அத்துடன் சமூகவலை தளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : கோவையில் மதுபான கூடத்தில் கடும் மோதல்.. மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிய கும்பல்.. பெரும் பரபரப்பு!
எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்றார்.