டாஸ்மாக் முறைகேடு வழக்கு… கரூரை சேர்ந்த இருவர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!
TASMAC Malpractice Case Two Arrested : டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கரூரை சேர்ந்த இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் அதிரடியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நிகழ்ந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் மேலும் ஒரு புதிய வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்திருந்தனர். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிர்வாக முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
40- க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாக முறைகேடு வழக்கில் கரூரை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பதாக ஊழல் தடுப்பு போலீஸ்சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியும், நண்பருமான ரமேஷ் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் படிக்க: காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்.. முதல்வர் விஜய் வழங்கினார்!




கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
அவர்களை, சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரம் காண்பித்தனர். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டிருந்தது.
டாஸ்மாக் முறைகேட்டில் பலர் கைதாக வாய்ப்பு
பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கையில் மேலும் பலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!