மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்க காரணம்.. கூட்டணி தலைவர்கள் விளக்கம்!
Secular Social Justice Victory Alliance : தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் வைத்ததற்கான காரணத்தையும், நிலைப்பாட்டையும் கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கி உள்ளனர். அதனை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை பனையூரில் கூட்டணி கட்சி தலைவர்களான மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்:
இந்த கூட்டணியானது தமிழகம், புதுச்சேரிக்குமானதாகும். மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக இந்த கூட்டணி இருக்கும். வருகிற இடைத்தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிடும். இந்த கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளனர். இவர்களின் வெற்றிக்காக நாங்கள் அனைவரும் பாடுபடுவோம். இந்த கூட்டணியானது சமூகநீதி, மதச்சார்பற்றதன் அடிப்படையிலும், தமிழகத்தின் நன்மைக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!




விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:
இதுவரை ஆதரவு காட்சிகளாக இருந்த நாங்கள் தற்போது கூட்டணி கட்சிகளாக பரிணாமம் அடைந்துள்ளோம். மதசார்பின்மையும், சமூக நீதியும் இந்த கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள் ஆகும். இதனாலையே மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதசார்பின்மையே அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது. மதவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக களத்தில் நாங்கள் கை கோர்த்துள்ளோம். இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களையும் சேர்ந்து சந்திப்போம். ஒன்றாக பயணிப்போம் என்றார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ:
தமிழகத்தில் இந்துத்துவா, பாசிச சக்திகளுக்கு இடம் அளிக்காத வகையில் என்ற உணர்வோடு நாங்கள் கரம் கோர்த்துள்ளோம். மதச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை இலக்காக வைத்து கூட்டணி செயல்படும் என்றும், மாவட்டம் தோறும் உள்ள தவெக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான கூட்டங்கள் நடத்தப்படும். இரு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் தவெக எடுக்கும் முடிவின்படி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம். தோழமைக் கட்சிகளின் தலைவர்களோடு முதல்வர் விஜய் இரு தொகுதிகளில் பிரச்சாரம் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்:
தமிழக அரசியல் வரலாற்றில் தற்போது புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு சமீப காலத்தோடு நின்று விடாது. எதிர்காலத்திலும் கூட்டணி அமைச்சரவை தொடரும். சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என அனைத்திலும் தவெக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். அதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு புதிய பெயரும் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க: தவெக தலைமையில் உருவானது புதிய கூட்டணி.. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைப்பு..!