பஜ்ஜி சாப்பிட்ட சிறுமி மயங்கி விழுந்து பலி.. திருவள்ளூரில் சோக சம்பவம்!
9 Years Old Girl Died After Eating Bajji | திருவள்ளூரில் செந்தில்குமார் என்ற காவலர் தனது 9 வயது மகளுக்கு பஜ்ஜி வாங்கி கொடுத்த நிலையில், அதனை சாப்பிட்டுக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், செப்டம்பர் 08 : திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அருகே பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு இருந்த 9 வயது சிறுமி, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு இருந்த அந்த சிறுமி, திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஜ்ஜி சாப்பிட்ட சிறுமி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், லச்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு 9 வயதில் ஸ்ரீத்திகா என்ற மகள் இருந்தார். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். செந்தில்குமார், செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க : தமிழக சட்டமன்ற தொடர்.. நாளையும் கேள்வி நேரத்துக்கு நோ.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் அறிவிப்பு!




பஜ்ஜி சாப்பிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் தான் செப்டம்பர் 03, 2026 அன்று செந்தில்குமார் தனது மகளை பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு சாப்பிட பஜ்ஜி வாங்கி கொடுத்துள்ளார். அப்போது, பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு இருந்த அந்த சிறுமி திடீரென வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதையும் படிங்க : கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!
சிகிச்சை பலன் இல்லாமல் பலியான சிறுமி
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிறுமி, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், செப்டம்பர் 05, 2026 அன்று சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.