தமிழக சட்டமன்ற தொடர்.. நாளையும் கேள்வி நேரத்துக்கு நோ.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திடீர் அறிவிப்பு!
TN Legislative Assembly session Question Hour : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நாளையும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அறவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் முடிந்துள்ள நிலையில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், வருவாய் துறை, நீர்வளம், நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்று திங்கள்கிழமை ( செப்டம்பர் 7- ஆம் தேதி) நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை விவாதங்கள் மீது முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் முன்னதாகவே கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதியுடன்) நிறைவடைய உள்ள நிலையில் நாளையும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
8 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம்
அதன்படி, நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரில் தமிழக சட்டமன்றம் பொதுத்துறை, அமைச்சரவை, ஆளுநர், நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை உள்ளிட்ட 8 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1:30 மணி அளவில் அவையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் சுருக்கமாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய அலுவல்கள் முடிந்த பின்னர், தமிழக சட்டமன்ற கூட்டத்துடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட இருப்பதாக சட்டப் பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் படத்தில் வசனம் பேசுவது போல கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. நயினார் நாகேந்திரன் அட்டாக்!




எதிர்க் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன. இந்த நிலையில், நாளையுடன் நிறைவு பெறும் கூட்ட தொடரிலும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பேரவை தலைவர் அறிவித்திருப்பது எதிர்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த சட்டமன்றம்
அதற்கு மறுநாள் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இரு நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். இவ்வாறாக சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?