திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. கே.என். நேரு உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு.. பிடியை இறுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்?
DMK Former Minister K. N. Nehru : நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ. 1,020 கோடி முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, அவரது சகோதரர்கள் உள்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு உள்ளிட்ட 13 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக கே. என். நேரு இருந்தபோது டெண்டர் வெளியிட்டது மற்றும் பணி நியமனங்கள் ஆகியவற்றை ரூ.1,020 கோடி முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், இது தொடர்பாக அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, அவர்கள் சகோதரர் ஆகியோர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டிருந்தனர்.
கே.என்.நேரு உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, அவரது சகோதரர் கே. என். மணிவண்ணன், ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உள்பட 13 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பதிவு செய்த எஃப் ஐ ஆர் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: “விஜயகாந்த் என்ற வைரத்தை இழந்தோம்!”.. மேடையில் உடைந்த விஜய பிரபாகரன்!!




லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கை
அதில், கட்சி நிதி என்ற பெயரில் டென்டரில் சுமார் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே. என். நேரு உள்ளிட்ட 13 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கே. என். நேரு தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
நகராட்சி நிர்வாக துறையில் நிகழ்ந்த முறைகேடு விவரம்
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை உரிய ஆவணங்களுடன் அப்போதைய தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருந்தது. இதில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், இதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதி விபத்து.. பைக் ஓட்டி வந்த இளைஞர் துடிதுடித்து பலி.. பரபரப்பு!!