“விஜயகாந்த் என்ற வைரத்தை இழந்தோம்!”.. மேடையில் உடைந்த விஜய பிரபாகரன்!!
DMDK Vijaya Prabhakaran Emotional Speech: "வைரமான விஜயகாந்தையே மக்கள் இழந்துவிட்டார்கள்" எனத் தேமுதிக நிர்வாகி விஜய பிரபாகரன் உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக தேமுதிகவிற்கும் கேப்டன் விஜயகாந்திற்கும் மக்கள் சரியான அங்கீகாரம் வழங்கவில்லை என்றாலும், தொண்டர்கள் இன்னமும் விசுவாசத்துடன் மக்கள் பணியாற்றி வருவதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, செப்டம்பர் 07: தேமுதிக நிறுவனத் தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய அவரது மகனும் தேமுதிக முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் குறித்து மிகுந்த ஆதங்கத்துடனும் உருக்கத்துடனும் பேசியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகத் தேமுதிக மக்கள் நலனுக்காகவே பாடுபட்டு வந்த போதிலும், தமிழக மக்கள் கேப்டன் விஜயகாந்திற்கும் கட்சிக்கும் உரிய அங்கீகாரத்தையும் ஆதரவையும் வழங்கத் தவறிவிட்டதாக அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: “கோடி கோடியா பணமும்.. அமைச்சர் பதவியும் தந்தாங்க!”.. பரபரப்பை கிளப்பிய IUML எம்.எல்.ஏ-வின் பேச்சு!!
தொண்டர்களின் விசுவாசமும் கேப்டனின் கொள்கையும்:
நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன், “கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டதிலிருந்து 21 ஆண்டுகளாக மக்கள் சரியான அங்கீகாரத்தைக் கேப்டனுக்கோ அல்லது நமது இயக்கத்திற்கோ வழங்கவில்லை. இருப்பினும், மக்கள் அங்கீகாரம் தரவில்லை என்பதற்காக நமது தொண்டர்கள் சோர்வடைந்து விடவில்லை. கேப்டனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொடிகளையும் பேனர்களையும் அமைத்துக் கொண்டாடி வருகிறார்கள். ‘சுவரில் அடித்த பந்து போல மக்கள் எவ்வளவு தூக்கி எறிந்தாலும் மீண்டும் மக்கள் முன்னே வந்து நிற்க வேண்டும்’ என்ற கேப்டனின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டு நமது தொண்டர்கள் இன்றும் சலியாது உழைத்து வருகிறார்கள்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார.
“வைரத்தை இழந்தோம்” – மக்கள் மீதான ஆதங்கம்:
அரசியலில் மற்ற தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வாய்ப்பளித்த தமிழக மக்கள், கேப்டன் விஜயகாந்தின் திறமையையும் நற்குணத்தையும் உணராமல் விட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். “வைரத்தை இழந்தோம், தங்கத்தை இழக்க மாட்டோம் என்றெல்லாம் பொய்ப் பிரசாரங்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், உண்மையான வைரமான கேப்டன் விஜயகாந்தையே நாம் இழந்துவிட்டோம். இன்று பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தாலும், நாங்கள் அரசியலுக்கு வந்தது பதவிக்காகவோ சுயநலத்திற்காகவோ அல்ல; எங்கள் தலைவரை முதலமைச்சராகப் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் வந்தோம்” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!
விஜய பிரபாகரனின் வேண்டுகோள்:
தான் மிகவும் இளம் வயதிலேயே அரசியலுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டதை நினைவுகூர்ந்த விஜய பிரபாகரன், “பொதுவாக அந்த வயதில் உள்ள இளைஞர்களைப் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்குமாறுதான் பெற்றோர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், கட்சி தொய்வடைந்த காலத்தில், எந்தப் பயமும் இன்றி, கேப்டனின் மகனாகக் களத்தில் இறங்கி நின்றேன். இதையெல்லாம் தமிழக மக்கள் ஏன் கவனிக்க மறுக்கிறார்கள்? கேப்டன் தனது சொத்துக்கள் உட்பட அனைத்தையும் மக்களுக்காகவே கொடுத்தவர். அவரது மகனாக நாங்கள் மக்களிடம் உரிமையோடு கேட்பது ஒன்றே ஒன்றுதான். கேட்பது எங்கள் உரிமை, அதை அங்கீகாரமாகக் கொடுப்பது மக்களின் கடமை” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.