AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கோடி கோடியா பணமும்.. அமைச்சர் பதவியும் தந்தாங்க!”.. பரபரப்பை கிளப்பிய IUML எம்.எல்.ஏ-வின் பேச்சு!!

IUML MLA Revelations: "எங்களைத் தேடி கோடி கோடியாகப் பணத்தையும், அமைச்சர் பதவிகளையும் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; ஆனால் நாங்கள் பணத்திற்குச் சாய்பவர்கள் அல்ல, கொள்கைக்குச் சார்ந்தவர்கள்" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார். அரசியல் வட்டாரத்தில் அவரது பேச்சு பெரும் பூதாகரமாகியுள்ளது.

“கோடி கோடியா பணமும்.. அமைச்சர் பதவியும் தந்தாங்க!”.. பரபரப்பை கிளப்பிய IUML எம்.எல்.ஏ-வின் பேச்சு!!
எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Sep 2026 07:28 AM IST

சென்னை, செப்டம்பர் 07: தமிழக அரசியல் களத்தில் தேர்தல்களும், கூட்டணி மாற்றங்களும் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சிகளுக்கு இடையே நடக்கும் திரை மறைவு குதிரை பேரம் மற்றும் அழுத்தங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி சார்பில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, தங்களுக்கு அளிக்கப்பட்ட பெரிய அளவிலான பண ஆசைகள் மற்றும் அதிகாரப் பதவிகள் குறித்த அதிர்ச்சி தரும் பின்னணியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். தங்களது இயக்கமும் மக்கள் பிரதிநிதிகளும் கொள்கையில் உறுதியாக நின்று அத்தகைய ஆசை வார்த்தைகளை நிராகரித்ததாக அவர் ஆவேசமாகப் பேசினார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடி கோடியாகப் பணம், அமைச்சர் பதவி:

கூட்டத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, “எங்களையும் எங்களது சக மக்கள் பிரதிநிதிகளையும் தேடி சிலர் கோடி கோடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தார்கள். தாங்கள் தயாரித்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்திட்டால் எந்தத் துறை அமைச்சர் பதவி வேண்டுமானாலும் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள். உள்ளாட்சித் துறையா அல்லது போக்குவரத்துத் துறையா எது வேண்டும் என்று கேட்டு, எங்களை வற்புறுத்தினார்கள்” என்று தெரிவித்தார். மேலும், “நாங்கள் பணத்திற்குச் சாய்பவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களது இயக்கம் என்றும் இறைவனுக்கும், மக்கள் தொண்டிற்கும், கொள்கைக்கும் மட்டுமே கட்டுப்பட்டது என்று கூறி வந்தவர்களை உடனடியாக விரட்டி அடித்தோம்” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஷாஜகானை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்தார்கள். தலைவர், ‘எனக்கும் அமைச்சரவைப் பதவி வேண்டும்’ என்று கேட்டிருந்தார்” என்று தெரிவித்தார். அதற்கு மேல் அவர் பேசுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால், அவர் அது குறித்து பேசுவதை நிறுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தல் வியூகம்:

தொடர்ந்து பேசிய அவர், கட்சி வளர்ச்சிக்காகவும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவிலான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகவும் கட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். திராவிடக் கொள்கை மற்றும் சமூக நீதியை ஏற்றுக்கொண்ட கூட்டணிகளுக்கே தாங்கள் ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் இனத்தால் திராவிடர்கள், மதத்தால் முஸ்லிம்கள், மொழியால் தமிழர்கள், தேசத்தால் இந்தியர்கள்” என்ற உணர்வோடு செயல்படுவதாகத் தெரிவித்தார். இளைஞர்களை அதிக அளவில் அமைப்பில் இணைத்து, வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் பணியாற்றிப் புதிய வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையும் படிக்க : திடீர் மின் கட்டண உயர்வா?.. களத்தில் இறங்கும் மின்வாரியம்.. ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு!!

சட்டமன்றப் பணிகளும் சமுதாய நலத்திட்டங்களும்:

சமுதாய நலப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்றத்தில் சமுதாயக் கபஸ்தான்களுக்காக ரூபாய் 100 கோடி நிதியும், சிறுபான்மையினருக்கான வட்டி இல்லாக் கடனுக்காக நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார். பொதுமக்கள் பட்டா வாங்குவது அல்லது இதர அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் இடைத்தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க, உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சித் தொண்டர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கிச் சட்டப்பூர்வமாகச் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தவறுதலான கோரிக்கைகளுக்கோ அல்லது சட்டத்திற்குப் புறம்பான கோப்புகளுக்கோ ஒருபோதும் பரிந்துரை செய்யக் கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us