முன் கூட்டியே தொடங்கும் ஐபிஎல் 2027 – போட்டிகள் அதிகரிக்கப்படுமா? பிசிசிஐ விளக்கம்
IPL 2027 : ஐபிஎல் 2027 தொடர் மார்ச் 10 முதல் மே 15 வரை நடைபெறக்கூடும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் அதனை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2027க்கான தனது திட்டத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, 20வது சீசன் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படி அடுத்த 2027 ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் மே 15 வரை ஐபிஎல் தொடரை நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
அடுத்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் ஐபிஎல்
2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை முன்னதாகவே தொடங்குவதற்கான காரணமாக வானிலை சூழலை பிசிசிஐ சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஐபிஎல் 2027 ஆம் ஆண்டுக்கான மொத்த போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.




இதையும் படிக்க : IND A vs AFG-A: முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா ஏ.. வெளியேறியதா ஆப்கானிஸ்தான் ஏ?
ஐபிஎல் 2027 குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர்
STORY | BCCI eyes Mar 10-May 15 IPL window next season amid heat concerns: Devajit Saikia
In its bid to beat the extreme May heat in most parts of the country, the BCCI is contemplating an early start to the IPL, eyeing a March 10-May 15 window for future editions starting next… https://t.co/3oKYr3Vso5
— Press Trust of India (@PTI_News) June 18, 2026
ஐபிஎல் 2027 தொடரை முன்னதாகத் தொடங்குவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “வீரர்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் மார்ச் 10 முதல் மே 15 வரை இத்தொடரை நடத்த இலக்கு வைத்துள்ளோம்,” என்று கூறிய அவர், மே 15-க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதையும் சுட்டிக்காட்டினார்.
போட்டிகளின் எண்ணிக்கையில் மாற்றம்?
ஐபிஎல் 2027 ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த தேவஜித் சைகியா, தற்போது போட்டிகளை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றுதெளிவுபடுத்தினார். முந்தைய சீசனைப் போலவே இதிலும் 74 போட்டிகள் நடைபெறும். போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 94-ஆக உயர்த்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்று சைகியா குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : IND vs AFG: சேப்பாக்கத்தில் கடைசி ஒருநாள் போட்டி… ஓய்வை அறிவிக்கிறாரா ரோஹித் சர்மா..?
குறிப்பிடத்தக்க வகையில், ஐபிஎல் 2026 மார்ச் 28-ல் தொடங்கி மே 31-ல் இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்தது. இக்காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை பிசிசிஐ தீவிரமாகக் கவனித்தது. இப்போது, அதைக் கருத்தில் கொண்டு, அடுத்த சீசனை முன்னதாகவே தொடங்க வாரியம் திட்டமிட்டுள்ளது.