சகோதரர் விஜய்க்கு வாழ்த்து.. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாதக செயல்படும்.. சீமான்!
Ntk Chief Coordinator Seeman : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 108 சட்டமன்ற தொகுதிகள், 1 கோடியே 58 லட்சம் வாக்குகள், 34.8 சதவீத வாக்குகள் என தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர் சார்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சகோதரர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்து
அதில், அவர் கூறியிருப்பதாவது: அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை பொது தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைத்து சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விரைவில் பதவி ஏற்க இருக்கும் சகோதரர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. நோட்டாவுக்கு குறைந்த மக்கள் ஆதரவு.. புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாதக செயல்படும்
தமிழர்களின் வரலாற்று தாய் நாடான தாய் நாடு என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும், நாங்கள் தொடர்ச்சியான களப் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபடுவோம். நாம் தமிழர் கட்சியினர் ஒரு பொறுப்பு உள்ள எதிர்க் கட்சியாக நிற்பதுடன், தமிழ் மண் மற்றும் மக்களுக்கும் ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக…
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) May 5, 2026
தவெக தலைவருக்கு அரசியல் கட்சியினர் வாழ்த்து
இதே போல, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்க உள்ள கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாஸ்டர் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: எதிர்பாராத திருப்பங்களும் தேர்தல் முடிவுகளும் – ஒரு முழுமையான பார்வை