காங்கோ மேலாளருக்கு விசித்திர வலை.. ரூ75.2 லட்சத்தை அசால்ட்டாக ஆட்டையை போட்ட வாலிபர்.. தூத்துக்குடி சைபர் கிரைம் வைத்த செக்!
Thoothukudi Youth Arrested : தென் ஆப்பிரிக்க நாட்டில் வேலை பார்த்து வரும் மேலாளர் ஒருவரிடம் முதலீடு செய்தால் 200 சதவீதம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.75.2 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தென்னாப்பிரிக்க நாட்டின் காங்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது சமூக வலைதள பக்கத்தில் விளம்பரத்துடன் கூடிய ஒரு லிங்க் ஒன்று வந்தது. அதில், குறைந்த முதலீட்டில் 200 சதவீதம் அதிக லாபம் பெறலாம் என கவர்ச்சிகரமான தகவல் பதிவிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்த நபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதன்படி, ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் அந்த நபர் இணைக்கப்பட்டார். அந்த குழுவில் பலர் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் அதிக லாபம் பெற்றது போன்ற போலி தோற்றத்தை அதில் மர்ம நபர் ஒருவர் பதிவேற்றம் செய்து வந்தார். இதை உண்மை என நம்பிய அந்த மேலாளர் சிறிது சிறிதாக மொத்தம் ரூ.75 லட்சத்து 25 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
ஆன்லைன் வாயிலாக சைபர் கிரைம் போலீசில் புகார்
வெகு நாட்கள் ஆகியும், அந்த மேலாளருக்கு லாபத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்ற போது, அதில் பணம் இல்லாதது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த மேலாளர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக இணைய வழி குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தூத்துக்குடி இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!




தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் கைது
இந்த விசாரணையில், மோசடி கும்பலுக்கு உதவியாகவும், வங்கி கணக்குகளை செயல்படுத்துவதற்கு உடந்தையாகவும் இருந்த தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பள்ளிப்பத்து கிராமத்தை சேர்ந்த அர்ஜுன் ( 32 வயது) இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பண மோசடி சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
வடமாநிலத்தை சேர்ந்த 5 பேருக்கு வலைவீச்சு
அதன் அடிப்படையில், அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்த சைபர் கிரைம் போலீசார் அந்த 5 நபர்களை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் வாயிலாக பண மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!