தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு.. வீட்டில் நுழைந்து பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்… வெளுத்து வாங்கிய கிராம மக்கள்!
Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட முயன்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், மூத்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் குமார் ( 23 வயது). இவர், கயத்தாறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ஓட்டுநர் குமார் அவரது வீட்டின் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்து திடீரென பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். இதனால், அந்த நபர் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக சத்தம் கேட்ட நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டின் முன் திரண்டு வந்தனர்.
இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்
அப்போது, வீட்டில் இருந்து தப்பி ஓடிய அந்த இளைஞரை பொதுமக்கள் விரட்டி சென்று சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து, இது தொடர்பாக கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: ராமநாதபுரத்தில் அதிரடி.. ரூ50,000 லஞ்சம் வாங்கிய RDO கையும் களவுமாக கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை!
இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு – கைது
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைதல், பெண்ணுக்கு களங்கம் விளைவித்தல், பாலியல் வன்கொடுமை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உதவி ஆய்வாளர் காந்தி ராஜன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். தொடர்ந்து, அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கிராம பகுதியில் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிராமத்தில் பெரும் பரபரப்பு – பொது மக்கள் அதிருப்தி
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், சில இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் படிக்க: கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!