தவெக தொடர்ந்து முன்னிலை.. அரசியல் ஆலோசகருடன் விஜய் அவசர ஆலோசனை!
Tamilnadu Assembly Election Result : தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தொடர் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 107 சட்டமன்ற தொகுதிகளுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டை சுற்றி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் வீட்டுக்கு வருகை தந்த ஐபிஎஸ் அதிகாரிகள்
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான சேபாஸ், கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறார்.
தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த ஜான் ஆரோக்கிய சாமி
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தயாரித்துக் கொடுத்த பேச்சுகளை மட்டுமே விஜய் பேசி உள்ளார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுத்த வியூகங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது, பெரும்பான்மை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் நெருங்கி வரும் நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமியுடன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியிடும் என கூறப்படுகிறது.