ஒரே குடும்பம்.. 3 எம்எல்ஏக்கள்.. தேர்தல் களத்தில் மார்ட்டின் குடும்பத்தினரின் மாஸ்டர் ஸ்கெட்ச்
Election Result 2026: ஒரே தேர்தல் ஆண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், வெவ்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான மார்ட்டின் குடும்பத்தினரின் திட்டமிட்ட முயற்சியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
2026 சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வெவ்வேறு கட்சிகள் மற்றும் மாநிலங்களில் போட்டியிட்டாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. எனினும், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழகத்தில் ‘தொங்கு சட்டசபை’ அமைந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மார்ட்டின் குடும்பத்தினரின் வெற்றி ஒரு சுவாரசியமான திருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க: “தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!
வெற்றி பெற்ற மார்ட்டின் குடும்பத்தினர்:
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, சுமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லிமா ரோஸ் மார்ட்டின், அதிமுக சார்பில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவராகப் போட்டியிட்ட மார்ட்டினின் மகன் ஜோ ஸ்டார்லஸ் மார்ட்டின், சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அரசியல் அதிகார விரிவாக்கம்?
ஒரே தேர்தல் ஆண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், வெவ்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது. இது அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான மார்ட்டின் குடும்பத்தினரின் திட்டமிட்ட முயற்சியாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
யார் இந்த சாண்டியாகோ மார்ட்டின்?
சாண்டியாகோ மார்ட்டின், மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர். தனது இளமைக்காலத்தில் மியான்மரில் சாதாரணத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து தமிழகத்திற்குத் திரும்பி, 1988-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ‘மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். வெறும் 13 வயதிலேயே லாட்டரி விற்பனைத் துறையில் காலடி எடுத்து வைத்த அவர், தனது கடின உழைப்பால் மிகக் குறுகிய காலத்தில் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..
‘லாட்டரி கிங்’ என்ற அசுர வளர்ச்சி:
தமிழகத்தில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்த 90-களில், மார்ட்டின் அத்துறையின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார். தமிழகத்தில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டாலும், கர்நாடகா, கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனது கிளைகளைப் பரப்பினார். சிக்கிம் அரசின் லாட்டரி திட்டங்களை நிர்வகிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினார். அவரது நிறுவனம் (Future Gaming and Hotel Services) இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டும் மற்றும் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. பலமுறை ‘சிறந்த வரி செலுத்துபவர்’ விருதினையும் அவர் பெற்றுள்ளார்.