அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் மாற்றம்… பாஜகவின் ரகசிய திட்டம்… முதல்வர் மு. க. ஸ்டாலின் வீசிய அரசியல் வெடிகுண்டு!
Chief Minister MK Stalin : வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேறொரு நபர் நியமிக்கப்பட இருப்பதாகவும், அதற்கான நபரை பாஜக தேர்வு செய்துள்ளதாகவும் மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மதுரையில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா இன்று சனிக்கிழமை ( மார்ச் 7) நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்துள்ளார். மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டும் இன்றி, நானும் ரசிகன் தான். ஓ. பன்னீர்செல்வம் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார். அதுதான் அவருடைய பண்பாகும். பொதுவாக ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டால் தான் அது பிரச்சினையாகும். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் சிரிப்பே ஒரு காலத்தில் அவருக்கு பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓ. பன்னீர்செல்வம், என்னை பார்த்து சிரித்து விட்டார்.
அரசியலில் ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியில்
உடனே, ஸ்டாலினை பார்த்து ஓ. பன்னீர்செல்வம் சிரித்து விட்டதாக கூறி, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் போன்று பிரச்சினையை கிளப்பி விட்டார்கள். அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், சட்டமன்றம் மற்றும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, நலம் விசாரிப்பது அரசியல் பண்பாடாகும். அப்படி தான் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை பார்த்து நான் வணக்கம் செலுத்தினேன். உடனே, இதையும் குற்றச்சாட்டாக்கிவிட்டனர். ஆனால், யார் என்ன கூறினாலும் தனது பண்பை மாற்றிக் கொள்ளாமல் தற்போது வரை சிரித்த முகத்துடன் இருந்து வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..




ஓபிஎஸ் என்றால் விசுவாசம்- ஈபிஎஸ் என்றால் துரோகம்
அமைதி, புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ் என்று கூறினால் ஞாபகத்துக்கு வரக்கூடிய ஒரே சொல் விசுவாசம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அமர்ந்த இருக்கையில், ஓபிஎஸ்-ஐ 2 முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எந்தவித துரோகமும் செய்யாமல் மீண்டும் ஒப்படைத்த நேர்மைக்கு சொந்தக்காரர் தான் ஓ பன்னீர்செல்வம். இதனால் தான் ஓ. பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா புகழ்ந்து பேசியிருந்தார். விசுவாசத்துக்கு ஓ பன்னீர்செல்வம் என்றால் துரோகத்துக்குஅடையாளமாக இருப்பவர் தான் பழனிசாமி.
சசிகலா காலில் விழுந்து தவழ்ந்தவர் எடப்பாடி
கூவத்தூரில் சசிகலா காலில் விழுந்து, தவழ்ந்து சென்று முதல்வர் ஆகிவிட்டு, அவரை எதிர்த்து நீ எனக்கு பதவி தந்தாயா என்று ஒருமையில் கேட்டவர் தான் பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிமுகவை அடமானம் வைத்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நிலைமைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் நாளை நடக்கும். பாஜகவை பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய விட மாட்டார்கள். இதற்காகவே, மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டது. வருகிற தேர்தல் வரை மட்டுமே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக பாஜக வைத்திருக்கும். அதன் பிறகு, பாஜக ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ள நபரை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக மாற்றிவிடும். அந்த அளவுக்கு அதிமுக பாஜகவின் கைப்பிடிக்குள் சென்று விட்டது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..