AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அதிமுகவில் பழிவாங்கப்பட்டேன்”.. திமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்..

O pannerselvam sensational Explanation: ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இன்று இல்லை. தனது பதவியை மட்டும் குறிக்கோளாக கொண்ட ஒருவரின் சுயநல அரசியலால் இன்று அபகரிப்பு அதிமுகவாக மாறிவிட்டது. பெரியார் தந்த திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவும், அண்ணா தந்த சமூக நீதிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

“அதிமுகவில் பழிவாங்கப்பட்டேன்”.. திமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்..
திமுகவில் ஓ.பன்னீர்செல்வம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Mar 2026 10:48 AM IST

மதுரை, மார்ச் 08: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நேற்று நடந்தது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, என்னுடைய 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கொண்ட கொள்கைக்கு நேர்மையாகவும், கொடுத்த பணிக்கு மனசாட்சியுடனும் பணியாற்றி இருக்கிறேன். நான் இருந்த இயக்கத்தில் எனக்கென்று ஒரு அணியை உருவாக்கியது இல்லை. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக இன்றைக்கு இல்லை.

இதையும் படிக்க : தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

அபகரிப்பு அதிமுகவாக மாறிவிட்டது:

ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக இன்று இல்லை. தனது பதவியை மட்டும் குறிக்கோளாக கொண்ட ஒருவரின் சுயநல அரசியலால் இன்று அபகரிப்பு அதிமுகவாக மாறிவிட்டது. பெரியார் தந்த திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவும், அண்ணா தந்த சமூக நீதிக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க சட்ட போராட்டம் நடத்தினேன். குறுக்கு வழியில் வந்தவர்களால் நான் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவ்வாறு பழிவாங்கப்பட்ட என்னை அன்போடு அழைத்து எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் கரம்பிடித்து வழிகாட்டிய தலைவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தேர்தலில் வெற்றி பெற முடியுமா?

அதிமுக சட்டத்தை வளைத்து திட்டம் போடலாம். சட்ட விதியை மாற்றி வட்டமும் போடலாம். தொண்டர்களின் உரிமையை பறித்துவிட்டு தொண்டை கிழிய கத்தலாம். ஆனால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்றால் இல்லை. தொடர் தோல்விகள்தான் தொடர்கதையாக உள்ளது. அங்கு இருக்கிற சுயநலக்காரர்களுக்கு, அகம்பாவம் பிடித்து இருக்கிறது. இனியும் தோல்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல்வியைத்தான் காணப் போகிறார்கள் என்பதை இங்கு கூடியிருக்கிற கூட்டம் நிரூபித்து காட்டி உள்ளது.

தன்மானத்துக்கு கேடானது:

இனிமேலும் அதிமுகவில் பயணிப்பது தன்மானத்துக்கு கேடானது என்பதை உணர்ந்துதான் 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் தடம் புரளாமல் காத்து வரும் திமுகவையும், அதை சிறப்பாக வழி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையையும் ஏற்று, தாய்க்கழகமான திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்து உள்ளேன். அதிமுக. உரிமை மீட்பு கழகத்தை திமுகவில் இணைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கூற்றுப்படி என்னையும், என்னுடன் பயணித்தவர்களையும் அன்போடு, அரவணைத்து பண்போடு பாசம் காட்டுவதுடன், பெரியாரின் தன்மானத்தையும், அண்ணாவின் அறிவையும், தெளிவையும் கருணாநிதியின் அரசியல் ஞானத்தையும், புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வேகத்தையும் ஒருங்கே பெற்றுள்ள திராவிட ஆட்சியின் நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைத்தான் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. அவரது வழியில் செயல்படுவதை என் வாழ்நாளின் லட்சியமாக செயல்படுவேன்.

இதையும் படிக்க : திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..

மாற்றுக்கருத்து இல்லை:

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன தேவையோ, அதை அறிந்து தந்தவர் மு.க.ஸ்டாலின். மக்கள் நலத்திட்டங்களை, உரிமைகளை பெற்று தருவதில் இந்தியாவே உற்று நோக்கும் அளவிற்கு பணியாற்றி வருகிறார். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், மகளிர் முன்னேற்றம் என பல சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து இருக்கிறது. சமீபத்தில் யு.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 பேரில் 57 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். அவரது ஆட்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Follow Us