மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்து 2 பேர் பலி.. நாமக்கல்லில் பரபரப்பு!
Water Tank Collapsed After Vehicle Hit In Namakkal | நாமக்கல்லில் சரக்கு வாகனம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தூண்கள் மீது மோதி கடும் விபத்துக்குள்ளான நிலையில், 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாமக்கல், ஜுலை 20 : நாமக்கல்லில் (Namakkal) மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு வாகனம் ஒன்று குடிநீர் தொட்டியின் தூணின் மீது மோதியதன் காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து 2 பேர் பரிதாப பலி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலையில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை நோக்கி நேற்று (ஜூலை 19, 2026) சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற 23 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் அந்த சரக்கு வாகனத்தில், மல்லச்சமுத்திரம் பகுதியை சேர்ந்த குமார் என்ற 29 வயது நபரும் பயணம் செய்துள்ளார். அவர் வாகனத்தில் சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளி ஆவார்.
இதையும் படிங்க : மின் கட்டணம் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசு விளக்கம்




மேல்நிலை குடிநீர் தொட்டியின் மீது மோதிய வாகனம்
இந்த வாகனம் மேட்டுப்பாளையம், சத்யாநகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது அந்த வாகனம், சாலை ஓரத்தில் இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் தூண்கள் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக அந்த 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி சரக்கு வாகனத்தின் மீது சரிந்தது.
இதையும் படிங்க : கடலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு.. ஆன் ஸ்பாட்டில் லஞ்சம் பெற்ற ஊழியர் சஸ்பெண்ட்!
இதன் காரணமாக சரக்கு வாகனத்தில் பயணம் செய்த ஓட்டுநர் சுபாஷ் மற்றும் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நீர்தேக்க தொட்டியை பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் அகற்றிவிட்டு, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.