திருவள்ளுவர் காவி உடை விவகாரம்.. ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்.. கொதித்தெழுந்த வைகோ!
Vaiko Says Black Flag Against Governor : மக்கள் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தில் ஆளுநர் அர்லேகருக்கு எதிராக மதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார் .
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தில் ஆளுநர் அர்லேகர் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் மதிமுக கருப்பு கொடி காட்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதேபோல, தென்காசி மாவட்டத்தில் 5- ஆம் தேதி விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளுவருக்கு ஆளுநர் அர்லேகர் காவி உடை போர்த்தியதை ஏற்க முடியாது. இந்த செயல் தொடர்ந்து நடைபெற்றால் ஆளுநர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் மதிமுக சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகின்றன. அதிகாரத்துக்கு அவர் புதியவர் ஆவார். நிர்வாகத்திற்கு சென்ற பின்னரே கஜானா காலியாக இருப்பது அவருக்கு தெரிகிறது.
முதல்வர் விஜய்க்கு 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்
எனவே, முதல்வர் விஜய்க்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை அவரை விமர்சிக்க வேண்டாம். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாக குழு கூட்டம் கூட்டப்பட்டு மதிமுக நிலைபாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம். தமிழகத்தில் சிறிய வயது குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்வது தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு கொலை செய்பவர்களுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை வழங்கக் கூடாது.
மேலும் படிக்க: திருவள்ளுவருக்கு காவி உடை… தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்.. சண்முகம் வலியுறுத்தல்!




பாலியல் குற்றவாளிகளுக்கு வாழ் நாள் சிறை தண்டனை
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கும் விதமாக குற்றவியல் சட்டத்தை திருத்தி மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதை சட்டமாக ஏற்ற வேண்டும். மேலும், போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அத்துடன் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை பெற்று தர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டுகளாக யாரையும் சந்திப்பதே இல்லை.
முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்
அவரை போல எந்த அரசியல்வாதியும் நகைச்சுவை செய்ய முடியாது. இதே போல, முதல் அமைச்சர் ஜோசப் விஜய் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும். செய்தியாளர்கள் சந்திப்பை அவர் தொடர்ந்து தவிர்த்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, அவர் செய்தியாளர்களை தவிர்க்காமல் அதனை ஏற்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மேலும் படிக்க: ராஜ்ய சபா இடைத்தேர்தல்… தவெக சார்பில் யார் வேட்பாளர்.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்!