நெல்லையில் தறிகெட்டு ஓடிய கார்.. நொடிப் பொழுதில் நேர்ந்த கோர விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 3 உயிர்!
Nellai Car Accident Three Killed: திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரு பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி பகுதியை சேர்ந்தவர் துரைச்சி, சிவகாமி, கிஷோர். இவர்கள் தங்களது காரில் சொந்த வேலை காரணமாக நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இவர்கள் காரானது காவல்கிணறு அருகே உள்ள வெள்ளமடம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பின்னர், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது அதி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த கோர விபத்தின் பயங்கர சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து காரின் உள்ளே சிக்கி அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காரில் சிக்கிய மூவர் மீட்பு
இதில், காரில் பயணித்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அந்த பகுதியில் உள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் துரைச்சி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் திருச்சி வருகை – ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்




அடுத்தடுத்து உயிரிழந்த 3 பேர்
அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி கிஷோர் மற்றும் சிவகாமி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிய வினோத் என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் உடல் கூறாய்வு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு அருகே கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளுவருக்கு காவி உடை… தமிழக மக்களிடம் ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும்.. சண்முகம் வலியுறுத்தல்!