நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி கண்டனம்
காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக டெல்லி சென்ற தமிழக விவசாயிகளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 2 : தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை. மேலும் ஆகஸ்ட் 2, 2026 இன்று நடைபெற்ற கர்நாடகா மாநில அனைத்து கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்குச் சாதகமான முடிவையே எடுக்கும் என்றார்.
நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது
இதற்கிடையில் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் அணுகுமுறையைக் கண்டித்தும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் ரயில் மூலம் மகாராஷ்டிரா வழியாக டெல்லி சென்றனர்.




இதையும் படிக்க : அரசியலை விட விவசாயிகளின் நலனே முக்கியம் – காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் உறுதி
இந்த நிலையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வைத்து அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
உதயநிதி கண்டனம்
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக…
— Udhay (@Udhaystalin) August 2, 2026
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
இதையும் படிக்க : சபரிமலை போறீங்களா? பக்தர்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும். டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.