அனைத்து கட்சி கூட்டத்திற்கு முன் “பாஜகவின் திடீர் மூவ்!”.. தமிழக முதல்வர் விஜய்க்கு வந்த கடிதம்!!
Karnataka BJP President Vijayendra Letter to TN CM: பெங்களூருவில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பாக, மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு, ஆகஸ்ட் 02: காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், மேகதாது அணைத் திட்டத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தித் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மிக முக்கியமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன் பாஜகவின் நகர்வு:
பெங்களூருவில் காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவதற்குச் சற்று முன்பாக, கர்நாடக மாநில பாஜக சார்பில் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவிலேயே கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, தமிழக முதல்வர் விஜய்க்கு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தமிழ்நாடும் கர்நாடகமும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான ஆழமான உறவால் பிணைக்கப்பட்ட சகோதர மாநிலங்கள் ஆகும். பெங்களூருவின் வளர்ச்சிக்குத் தமிழர்கள் எப்படிக் காரணியாக இருக்கிறார்களோ, அதேபோன்று தமிழகத்தின் வளர்ச்சியிலும் கன்னடர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்:
கடிதத்தின் மிக முக்கிய அம்சமாக, கடந்த காலத்தில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோர் இடையே நிலவிய முதிர்ச்சியான அணுகுமுறையை பி.ஒய். விஜயேந்திரா நினைவுகூர்ந்துள்ளார். பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையையும், தமிழகத்தில் சர்வக்ஞா சிலையையும் திறந்தபோது இரு தலைவர்களும் காட்டிய ராஜதந்திர முதிர்ச்சியையும் பரஸ்பர சுமுக உறவையும் போன்று, தற்போதைய மேகதாது அணை விவகாரத்தையும் தமிழக அரசும் கர்நாடக அரசும் இணைந்து சுமுகமாக எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நம்மைப் பிரிப்பதற்கல்ல:
போதிய மழை இல்லாத காரணத்தால் கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “காவிரி நதி இரு மாநில மக்களைப் பிரிக்கும் காரணியாக இல்லாமல், இரு மாநிலங்களையும் பிணைக்கும் பாலமாகத் திகழ வேண்டும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
மேலும், மேகதாது அணைத் திட்டம் என்பது பெங்களூரு மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று என்பதால், அத்திட்டத்திற்குத் தமிழக அரசு ஒத்துழைப்பு மனப்பான்மையோடு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், தமிழகத்திற்குரிய நியாயமான காவிரி நீர் உரிமைகளுக்குக் கர்நாடகா எப்பொழுதும் துணைநிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.