பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். குல தெய்வம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோவை, ஆகஸ்ட் 2 : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். கோவை மாவட்டம் மதுக்கரை எம்எல்ஏ வீதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி என்ற மனைவியும் ஆர்த்தி, இளைய மகள் நர்மதா என்ற மகள்களும் உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து
இந்த நிலையில் இவர்களது குடும்பத்தினர் மற்றும் தூரத்து உறவினரான ராமன் ஆகியோருடன் ஒரே காரில் ஆகஸ்ட் 2, 2026 இன்று உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு குல தெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை கனகராஜ் ஓட்டி வந்துள்ளார்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!




இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோமங்கலம் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கனகராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும் உடுமலை அருகே உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். நல்லாம்பள்ளி அருகே சென்ற போது சாலையோரம் சாலை மையத் தடுப்பில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” என்றனர்.
இதையும் படிக்க : திருவள்ளூர் நீதிமன்றத்தில் ரவுடியை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட கூலிப்படை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!
இதே போல சென்னை எண்ணூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கண்ணன் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ரயில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதியில் ரயில் பாதையை கடக்க ஏதுவாக பாலம் அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.