AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!

தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு, "பாதிக்கப்பட்டோரில் 60% பேர் ஆண்கள்!" என பொது சுகாதாரத்துறை வெளியிட்ட திடுக்கிடும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் தீவிரமடையும் நாய்க்கடி அவலம்.. இந்த ஆண்டில் இதுவரை 4.68 லட்சம் பேர் பாதிப்பு; 24 பேர் உயிரிழந்த சோகம்!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Aug 2026 07:20 AM IST

சென்னை, ஆகஸ்ட் 02: தமிழகம் முழுவதும் தெருநாய்களின் பெருக்கம் மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில், மாநிலப் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை வெளியிட்டுள்ள நடப்பாண்டிற்கான நாய்க்கடி தொடர்பான அதிர்ச்சி புள்ளிவிவரங்கள் பொதுமக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை அப்டேட் இதோ!!

பாதிப்புகளும் உயிரிழப்புகளும்:

பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 4,68,000 (4.68 லட்சம்) பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மிக மோசமான நிலையாக, நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் முழுமையான தரவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையின் தீவிரத்தை உணர முடிகிறது. கடந்த ஆண்டு (2025) முழுவதிலும் மாநிலம் முழுவதும் 6,25,700 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியிருந்தனர் மற்றும் 34 பேர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்திருந்தனர். ஆனால், நடப்பாண்டில் சில மாதங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தைக் கடந்து அதிவேகமாக உயர்ந்து வருகிறது.

சேலத்தில் உச்சக்கட்ட பாதிப்பு:

மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட வாரியாகப் பதிவான தரவுகளை ஆய்வு செய்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தெருநாய்களின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதை அறிய முடிகிறது. இதில் குறிப்பாக, மாவட்ட அளவிலான பாதிப்பில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதன்படி, 28,166 பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்திலேயே மிக அதிகபட்ச பாதிப்பை சேலம் பதிவு செய்துள்ளது. அடுத்ததாக, 23,905 பேர் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி 2வது இடத்தை பதிவு செய்துள்ளது. தொடர்ந்து, கடலூரில் 22,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 9,229 பேர் நாய்க்கடியால் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களைத் தாண்டி கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை சிகிச்சைகள் முறையாக நடைபெறாததே பாதிப்புகள் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

கடந்த சில ஆண்டுகளின் நாய்க்கடி தரவுகள் மற்றும் மருத்துவமனைகளின் பதிவுகளை விரிவாக ஆராய்ந்ததில், நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட வயது மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுபவர்களில் 60 விழுக்காட்டினர் (60%) ஆண்கள் ஆவர். தொழில் நிமித்தமாகவும், இரவு நேரப் பயணங்கள் காரணமாகவும் வெளியே நடமாடுபவர்கள் அதிகளவில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

வயது வரம்பு வாரியான வகைப்பாடு:

31 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட நடுத்தர வயதினரே நாய்க்கடியால் அதிக அளவில் காயமடைகின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, வீதிகளில் விளையாடும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளே அதிகளவில் தெருநாய்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!

பொதுமக்களின் கோரிக்கை:

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்து, இந்த நாய்க்கடி அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு தனது முதன்மை முன்னுரிமையாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us