2026-27 பட்ஜெட்: முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எதிர்பார்ப்புகள் என்னென்ன?
TN Budget Police Expectations: முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் உள்ள காவல்துறையில் பணிச்சுமை, ஊதிய உயர்வு, இடமாறுதல் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டிலேயே நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையில் காவலர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை, ஆக.02: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜயின் நேரடிப் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் என்னென்ன புதிய அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் இடம் பெறப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!
வார விடுமுறை கோரிக்கை:
காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை, கடுமையான பணிச்சுமை மற்றும் நீண்ட நேர வேலை காரணமாகக் காவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுக் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்களைத் தொலைதூர மாவட்டங்களுக்கு உடனடியாக மாற்றாமல், அருகிலுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இடமாறுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுത്തப்படுகிறது. தற்போது சுமார் 4,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து, கோப்புகள் முடங்கிக் கிடப்பதால் அவர்களின் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
காவலர் குடும்பங்களுக்கான தனிப் பள்ளிகள்:
தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, காவலர்களின் குழந்தைகளுக்கு என மாவட்டம் தோறும் தனியாகப் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். மற்ற அரசுத் துறைகளுக்கும் சில குறிப்பிட்ட சமூகங்களுக்கும் பள்ளிகள் இருப்பது போல், மாவட்டங்கள் தோறும் காவலர் பள்ளிகள் அமைப்பது அவர்களின் குடும்பப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும்போது அல்லது பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி நிவாரணத் தொகை வழங்கும் அரசாணையை நிரந்தர ஜி.ஓ-வாக மாற்ற வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் இலவசச் சிகிச்சை பெறும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
சீருடைப்படி மற்றும் ‘சில்வர் பட்டன்’ மாற்றம்:
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, காவலர்களின் அடிப்படைப் படியை ரூ.18,000-லிருந்து ரூ.25,000ஆக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. மேலும், சீருடைப் படியை ரூ.4,500லிருந்து இரட்டிப்பாக உயர்த்த வேண்டும் என்றும், ரிஸ்க் அலவன்ஸ்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
சுவாரசியமான கோரிக்கையாக, காக்கிச் சட்டையில் பயன்படுத்தப்படும் ‘சில்வர் பட்டன்’ முறையைத் தவிர்த்து, சாதாரண பட்டன்களைப் பயன்படுத்த அனுமதித்தால் அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ₹85 லட்சம் வரை சேமிப்பாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்ட எதிர்பார்ப்புகள்:
காவல்துறையில் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவியும், 30 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு ஆய்வாளர் பதவியும் தானாகவே கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
அத்துடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தாய்-தந்தையரையும் இணைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டிலேயே நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையில் காவலர்கள் காத்திருக்கின்றனர்.