தவெக அரசு பெரும்பான்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை.. உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ மேல்முறையீடு!
Tirupattur TVK candidate Srinivasa Sethupathi : தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபிப்பதில் ஆதரவாக வாக்களிப்பதற்கு திருப்பத்தூர் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஆகியோர் போட்டியிட்டார். இதில், முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் 83 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்றிருந்தார். சீனிவாச சேதுபதி 83 ஆயிரத்து 375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதாவது, 1 வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றியை பதிவு செய்தார். இதில், ஒரு தபால் வாக்கு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு, அந்த தபால் வாக்கு நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
தவெக அரசு வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிப்பு
இந்த வழக்கு விசாரணை நீதிபதி விக்டோரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நாளை புதன்கிழமை ( மே 13- ஆம் தேதி) தமிழக வெற்றி கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி பங்கேற்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் படிக்க: காதர் மொய்தீன் – செல்வப்பெருந்தகையுடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு.. அரசியல் நாகரீகம் என புகழாரம்!




உச்சநீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல் முறையீடு
இந்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் எம்எல்ஏவாக பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில் தமிழக வெற்றி கழக அரசு பெரும்பான்மைக்கு வாக்கு செலுத்த முடியாத நிலை உள்ளது.
நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் தர்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் தபால் வாக்கு நிராகரிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இதே போல, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராகி தபால் வாக்கு நிராகரிக்கப்பட்டதாக தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மக்களுக்கு இடையூறு – தொண்டர்களுக்கு தவெக கடும் எச்சரிக்கை