முதல்வரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை.. எங்கு? எப்படி செயல்படும் தெரியுமா?
Anti Narcotics Force : தமிழகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படக்கூடிய போதைப் பொருள்கள் தடுப்பு படையை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த படையானது எங்கு செயல்படும். எவ்வாறு செயல்படும் என்பது தொடர்பான விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் போதை பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டு போதை பொருள் கலாச்சாரம் கட்டுக்குள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
போதைப் பொருள் தடுப்பு படை
அந்த வகையில், இன்று கோவில்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் பகுதிகளில் உள்ள சுமார் 717 மதுக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டிருந்தார். இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு படை அமைக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் தடுப்பு படை காவல் நிலையங்களை அமைக்க வேண்டும்.
65 இடங்களில் போதைப் பொருள் தடுப்பு காவல் நிலையம்
இந்த காவல் நிலையங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு காவல் நிலையம் என, 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் என 28 காவல் நிலையங்களும் 12 சென்னை, தலா 2 வீதம் ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என மொத்தம் 65 போதை பொருட்கள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு படை செயல்படும் விதம்
இந்த படையானது மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்கள், எல்லை பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக ரோந்து செல்வதுடன், வெளிமாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்கும் முயற்சியை தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இதில், போதைப் பொருள்கள் கும்பல்கள் மற்றும் கடத்தல்காரர்களை கண்டறிந்து, என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செய்யப்படும்.மேலும், பொதுமக்கள் தரப்பில் இருந்து போதைப் பொருள் விற்பனை குறித்த புகார்களின் அடிப்படையில், அதிரடி சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.